Welcome!


நீ வரப்போவதில்லையென

7:27 AM Posted In Edit This 9 Comments »


இலையுதிர்க்கால முற்றத்தில்
குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக
வசந்தத்தின் பழைய பாடல்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி
தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம்

உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதொன்றில்
நினைவுகள் இறைந்து கிடக்கும் குளக்கரையின்
அதிரத் தளும்பும் அலைகளினூடாக
உடைந்த நிலவை கரங்குழித்து அள்ளுகிறேன்
விரலிடுக்கில் ஒழுகுகிறது வெறுமை

அதிகாலைக் கனவொன்றில்
அறைச்சுவரின் சட்டங்களுக்குள் பொறிக்கப்பட்ட
உன் புன்னகையேந்திய முகம் தூர்ந்துதிர
ஆழ் உறக்கத்தின் நடுவிலும்
உனை அணைத்துக்கொள்வதற்கென
சட்டென நீண்ட கரங்களுக்குத் தெரியவில்லை
இனி என்றும் நீ வரப்போவதில்லையென!

வலிகளில் தெரியும் முகம்

7:33 AM Posted In Edit This 7 Comments »


சோளப்பூக்களின்
மகரந்தமேந்திய தென்றலில்
கனிந்த வேப்பம்பழங்கள் வீழந்து
கிணற்றின் உறக்கம் கலைகையில்
சிதறும் 'தளுக்' களை
கெளுத்திமீன்கள் கவ்விச் செல்லும்

கிணற்றுச்சுவரின் சாத்தியப்பட்ட
கிளைகள் அனைத்திலும்
தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை
காய்ந்து தொங்கும்

அரவம் கேட்ட கணத்தில்
கவனம் காவிப்பறக்கும் சிட்டுகளின்
சிறகசைக்கும் ஆரவாரங்கள்
ஆழ்கிணற்றை நிறைத்துத் தளும்பும்

வெளிர்ஊதா மற்றும் மென்னீலமென
வண்ணக் கற்றைகள் விரவிய
முட்டையோட்டுக்குள் உறங்கும் தேன்சிட்டுகள்
காலங்களுக்காய்க் காத்திருக்கும்

சாம்பல் அணில்கள் ருசித்துப்போடும்
கருநீல நாவற்பழங்கள்
தன் கருமையின் மிச்சத்தை
நீர்ப்பரப்பெங்கும் குழைத்துப் பூசும்

இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்!

நானும் காதலும் - 1

6:03 AM Posted In Edit This 7 Comments »


மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!

அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!

முகங்களின் பெருமை பேசி..

7:25 AM Edit This 15 Comments »



















தமக்கென தனிப்பட்ட வரையறைகள்
தாங்கியனவாயிருக்கின்றன
இங்குள்ள முகங்களனைத்தும்

அடையாளங்கள் வார்த்த
அச்சுமூலங்களின் முகக்கீறல்களை
கிரீடங்களாயேந்தி கர்வம் கொள்கின்றன அவை

போர்த்தப்பட்ட அலங்காரங்களின்பின்னால்
ஆழத்துயிலுமொரு குழந்தை
விழிப்புதட்டி விசும்பும் பொழுதெல்லாம்
சுயங்களின் நலம்பாடும் தாலாட்டில்
அக்கறையோடு மீண்டும் உறங்கவைக்கப்படுகிறது

தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீள் நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப்பார்க்கிறேன்

அங்கே,
வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்தபடியிருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!

சாளரம்

6:03 AM Edit This 18 Comments »



















இந்தச்சாளரம்
இப்பேருலகின் உட்செல்ல
எனக்கான வாசலாயிருக்கிறது

மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்
இங்கிருந்தே என் கரங்களுக்கு
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
இளவெயிலின் புன்னகையுடனோ
என் அத்தியாவசிய முகங்கள்
இதன்வழியேதான்
எனதறைக்குள் பிரவேசிக்கின்றன

நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
வியாபாரத்திற்காய் விரைகின்ற
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!

தொடர்வண்டி நிலைய இருக்கை

7:42 AM Edit This 9 Comments »






















ஆற்றவியலா பெருந்துன்பம் தரும்
ஒரு பெரும் பயணப்பிரிவின்
சற்றுமுன்னதான தோள்சாய்தல்களை
நீ கணக்கின்றி சுமந்திருக்கலாம்!

யாவரும் அறியாப்பொழுதில்
பிரிவைத்தாளாது ரகசியமாய்
வழிந்ததோர் கண்ணீர்த்துளி
உன்னில் மோதி
சிதறித்தெறித்திருக்கலாம்!

பேசிமுடித்த வார்த்தைகள் போக
எஞ்சிய ஓரிரண்டு
பகிர்வுகளின் திராணியற்று
உன்னில் கிறுக்கப்பட்டிருக்கலாம்

தொலைதூரம் பயணித்த
பல சுமைகளோ களைப்புகளோ
உன்னில் இறக்கிவைக்கப்பட்டு
ஆசுவாசப்பட்டிருக்கலாம்!

தாமதித்த மனிதர்களின் பொருட்டோ
வண்டிகளின் பொருட்டோ
கணிசமான இரவுகளில்
உனக்குத் துணை கிடைத்திருக்கலாம்
இல்லையுன் தனிமை பறிபோயிருக்கலாம்!

இருப்பினும்
இன்றும் வழமையாய்
உன் மடியில் புன்னகையுடனும்
பூக்களுடனும் காத்திருக்கின்றன
பிறக்கப்போகும் பல புதிய நட்புகளும்
புதுப்பிக்கப்படும் பல பழைய உறவுகளும்!

வனாந்திரத்தின் நடுவே..

9:13 PM Edit This 9 Comments »






















நிலவின்றிக் கருத்த வானத்தின்
வெள்ளைப் பொத்தல்களில்
ஒழுகும் வெளிச்சங்கள்!
நள்ளிரவில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
நிசப்தத்தின் புதிய கூறுகள்!
அடர்மௌனத்தினை
மெதுவாய் சீண்டிப்பார்க்கும்
ஏரிக்கரையின் அலைச்சப்தம்!
அவ்வப்போது இருள்கிழித்து
படபடக்கும் சிறகுகள்
பழகிப்போன இருட்டு
விளக்கிலாத கூடாரம்
செருப்பில்லாத பாதங்கள்
இதயம் கீறிப்பார்க்கும்
நினைவின் நகங்களற்ற தனிமை
விடியற்பொழுதில்
மரக்கிளைகள் விலக்கி
சூரியக்கீற்றுகள்
முகத்தை வருடிய சமயம்
தொலைந்திருந்த நான்!

ஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மிங் பற்றியதொரு விழிப்புணர்வுக் கவிதை)

6:36 AM Edit This 16 Comments »



வானின் வர்ணங்கள் மட்டும்
ரசிக்கும் நம் கண்களுக்கு
அதன் இதயத்தின் ஓட்டைகள்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நாமும் நமது ஆடம்பர நாய்க்குட்டிகளும்
மென்றுதுப்பிய நச்சுகள் வானின் இதயத்தை
சல்லடையாய் அரித்துப்போனதையும்
அறியாதிருக்கிறோம்

உதயத்திலும் அந்தியிலும்
கண்கொட்டாமல் ரசிக்கப்படும் இதே சூரியனை
ஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குமொருநாள்
நம் சந்ததிக்கு காத்திருப்பதையும்
நாம் உணர்ந்திருக்கவில்லை

வானக்கிழிசல் வழி சூரியன் ஒழுகிக்கொண்டிருக்க
அதில் நனைந்துதுடிக்கும் குளிர்பாறைகள்
கண்ணீர் வடிக்கின்றன
வானம் கிழிக்கும் நாமோ
கரைந்துபோகுமொரு தோணியுடன்
சிறிதும் கவலையற்றிருக்கிறோம்

அவரவர் சுயங்களுடன் சுகமாயிருக்க
வெம்மையில் உலாவருமொரு நீர்ப்பறவை
தன் தாகம் தீர்க்கவேண்டி கொஞ்சம் கொஞ்சமாய்
குடிக்கத்துணிகிறது நிலமனைத்தையும்

வெம்மையில் விரியுமொரு திரவப்போர்வையோ
தன் சிறகுகள் விரித்து பூமிப்பந்தை
சுருட்டிக்கொள்ள முயல்கிறது

சூரியனும் பூமிப்பெண்ணின் மேல்
தன் மயிலிறகு முத்தங்கள் மறந்து
கோரமுகம்காட்டத் துணிந்தமைமைக்கு
அவளின் குளிர்முகம் வடிக்கும் கண்ணீரே சாட்சி!

பூமியின் கருப்பை வாசத்திலிருந்தபடியே
அவளின் நீர்க்குடம் உடைவதில்
சிறிதும் அக்கறையில்லாதிருந்தால் எப்படி?

வாருங்கள் மனிதர்களே!
பூமித்தாயின் கண்ணீர் துடைக்க வழி தேடுவோம்,
தாயின் கண்ணீருடன் எந்த பிள்ளையும்
சுகமாய் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை!

பிரிந்தும் பிரியாத நினைவுகள்

6:56 AM Posted In Edit This 15 Comments »










இரவின் நீளத்திற்கு
நீண்டிருந்த மழையில்
சாரல் மட்டும் வைத்துக்கொண்டு
மீதியை தொலைத்திருந்தது விடியல்

நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன

அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை

நானோ இந்த மழைநேரத்தில்
வழக்கமாய் வாசல்வரும் தேன்சிட்டுக்கும்
ஜன்னலில் கத்தும் குருவிகளுக்கும்
கவலைப்படவேனும் எத்தனிப்பின்றி
வெறுமனே மழையை வெறித்திருக்கிறேன்

நினைவுச்சுமைகளுடனான யதார்த்தப் பயணங்கள்
இன்னும் பழக்கப்படவில்லை எனக்கு
பிரிந்தும் பிரியாத நினைவுகள்
மிகவும் கொடுமைதான்

வழக்கமாய்
இன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்
மாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க
மரக்கிளைகள் சரியத்துவங்கும்

ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்

8:08 AM Posted In Edit This 15 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!

தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின்
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்
பழகினோம் சிரித்தோம் களித்தோம்

இன்னும் பிறந்திராத நம்
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்
தும்பிகளுடன் விளையாடியும்
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்

சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்
அச்சிறு பயணம் முடித்து
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில்
அமைந்திருந்ததை அறிந்தோம்

அதன்பின், உன்னுடையது என்னுடையதென
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்

மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!

போதை நிறைந்ததொரு பின்னிரவில்

12:04 PM Edit This 19 Comments »


நண்பர்கள்கூடி மதுவுடனே
நட்பாய் களித்ததோர் இரவினிலே
விடியல் நெருங்கும் வேளையிலே
நான் மாத்திரம் விழித்திருந்தேன்

அனைவரும் அசந்து உறங்கியபின்
நிலவினில் இரவினை ரசித்திருந்தேன்
அத்தனிமை சூழ்ந்த வேளைதனில்
அன்பாயழைத்தது குரலொன்று

நண்பா என்றெனை அழைத்திடவே
சுற்றிப்பார்த்தேன் அறைமுழுதும்
ஆடைவிலகிய உடல்களுடன்
அவனவன் ஒவ்வொரு மூலையிலே

அனைவரும் மயங்கிகிடக்கையிலே
அழைத்தது யாரென பார்க்கின்றேன்
இரவும் நிலவும் விழித்திருக்க
என் தனிமைதவிர யாருமில்லை

மீண்டும் கேட்ட குரல்வைத்து
வந்ததிசையில் துழாவுகையில்
மேசைத்தட்டில் நான்கண்டேன்
மீனினெலும்புக் கூடொன்று

தலையும்முள்ளும் தான்விடுத்து
மற்றனைத்தும் நண்பர் உண்டிருக்க
சிதைந்தகண்ணால் எனைநோக்கி
நட்பாய் என்னுடன் பேசிற்று

ஆச்சர்யமெனக்கு தாளவில்லை
பேசுவதெங்ஙனம் என்றேன் நான்
எப்பொழுதும் தான் பேசுவதாயும்
நானே கேட்டதில்லை யென்றதது

இவ்விடம்வந்த கதைகேட்க
ஏரியில்நீந்தி களித்ததையும்
எண்ணெயில்மூழ்கி துடித்ததையும்
கண்கள் கலங்க புலம்பிற்று

இயற்கைமேல் மனிதனாதிக்கமும்
எல்லாம் தனக்கே எனுங்குணமும்
பகுத்தறிவின் கூறுகளாவென தன்
ஐயத்தையென்னிடம் கேட்டிற்று

ஆட்டின், கோழியின் மேல்காட்டும்
காருண்யமேனும் தம்மினத்தில்
காட்டாததற்கு காரணமேனும்
அறியுமா என்றெனை வினவியது

பதிலில்லாமல் நான் விழித்திருக்க
காலையின் காகமும் கரைந்திடவே
அடுத்தமுறையில் சொல்வாயென்று
புன்னகையுடன் உயிர் துறந்திற்று

இரவில் மீனுடன் கதைத்த கதை
காலையில் இவனிடம் நான்சொல்ல
என்னைப்பார்த்து ஏளனமாய்
'இன்னுமா இறங்கல' என்கின்றான்.

ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்

4:34 AM Edit This 29 Comments »



சேட்டுக்கடையில் அடகுவைத்த
செப்புச்சருவம்
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக
பதிலுக்கு இரண்டாய்
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி
சொல்லிக்கொண்டாள்
'தூக்கிச் சுமக்க
இதுதான் நல்ல வசதி..'

கழுத்தில் கிடந்த
பொட்டுத்தங்கத்தை
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்
'இனிமேலாவது இருட்டுல
பதறாம போய்வரலாம்..'

கல்யாணவயதை
கடந்து நிற்கும் மகளை
இரண்டாம் தாரமாய் கேட்டுவர
சரியென்றவள் சாவகாசமாய்
காரணமும் சொன்னாள்
'மாப்பிளைக்கு வயசவிடவும்
அனுபவம் முக்கியந்தான...'

உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!

இரண்டற கலத்தலென்பது..

10:45 AM Posted In Edit This 12 Comments »



கிழியாத வானம் போல்
பிரியாத உறவு
இந்த இணைபுறாக்களுடையது

ஒன்றாய் பறக்கையிலும்
ஒன்றின் இறகு
விசிறித்தரும் காற்றே
மற்றொன்றின் சுவாசம்

இவை,
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்

இறகுகளின் அசைவைவிட
இதயங்களின் இசைவுகள் அதிகம்

மழைநேரத்தில்
இரண்டுமே தாயாகும்
ஒன்று மற்றதை அடைகாப்பதில்

இன்று காலையில் பறந்த
உண்டிவில் கல்லொன்று
ஒன்றின் உயிரை பறித்துப்போக,
கண்ணீருடன் தன்னுயிரை உதிர்த்தது
தனியான மற்றொன்று

இறக்கும் வரை இணைந்தேயிருக்கும்
தெய்வீக காதலரின் முன்னால்
இவையோ இறந்தபின்னும்
இணைந்திருந்தன

அன்பிலும் அடுப்பிலும்
ஒன்றாய்த்தான் கொதித்தன
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!

அந்தரங்கம் அறிதலென்பது..

9:08 PM Edit This 23 Comments »



அடுத்தவரின் அந்தரங்கமறிய
ஆசையில்லாதவர்
யாருமில்லையிங்கு!

சுவாரஸ்யம் தேடித்திரியும்
சில மனிதப்புலிகளுக்கு
ஓடத்தெரியாத மான்களென
மாட்டிக்கொள்கின்றன
கசிந்துபோன சில அந்தரங்கங்கள்!

ஒழுகிபோன ஒவ்வொரு அந்தரங்கமும்
ஆயிரம் முறைகள் பொழியும்
அடைமழையாய்!

செய்தித்தாள் துணுக்குகள் முதல்
குழாயடி பெண்களின் கிசுகிசு வரை
அரங்கேற்றத்துடனே அம்பலமாகின்றன
அவை!

நமக்கேன் வம்பு என
ஒதுங்கிச்செல்லும் கால்கள்கூட
காதுகள் கூர்மையாக்கியே நடக்க,

அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!

யாருமற்றதொரு பொழுதில்

2:41 PM Edit This 19 Comments »


அழகான என் கவிதையை
வாசிக்க ஆளில்லையென
கவலையாய் நான் திரும்புகையில்
படபடத்தபடியே படித்துப்போகிறது
ஜன்னல் வழி வந்த தென்றல்!

- - o 0 o - -

வீடுமுழுவதும் நிறைந்துகிடக்கும்
மௌனத்தின் திடத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது
குளியலறையில் சொட்டுகின்ற
திரவக்கவிதை!

- - o 0 o - -

முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!

- - o 0 o - -

சென்றவருடத்தில் பொரிந்த
குருவிக்குஞ்சுகளின் குரல்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
தாழ்வாரத்தின் வைக்கோல் மட்டுமுள்ள
வெற்று குருவிக்கூட்டில்..

- - o 0 o - -

பின்முற்றத்தில்
காக்கைக்கு வைக்கப்பட்ட சாதத்தில்
அமைதியாய் மொய்த்துக்கிடக்கின்றன
உன் நினைவுகளையொத்த எறும்புகள்!

- - o 0 o - -

இயற்கை புனிதம்:

7:08 PM Posted In Edit This 8 Comments »








அதிகாலை தோட்டத்தின் புல்வெளியில்
பனித்துளிகள் மிதந்திருக்க நான்கண்டேன்
மதிநிறைந்த இரவென்னும் கன்னியவள்
கால்கொலுசின் முத்துகள்தான் சிந்தினவோ?
குதித்தோடும் முழுமதியும் முன்னிரவில்
சிரிப்பொலியை சிதறித்தான் சென்றதுவோ?
கதிரவனும் கிழக்கெழவே நானுணர்ந்தேன்
அவையனைத்தும் முத்தல்ல வைரமென்று!

செங்கதிரோன் வெண்கதிர்கள் சிதறிவிழ
பனித்துளியை பட்டைதீட்டி வைத்தவன் யார்?
தீங்கில்லா பைம்புற்கள் ஒவ்வொன்றும்
வைரமதை முடிதாங்கி நிற்குதுபார்!
தாங்குகின்ற வெயிலவனின் காமமதில்
வைரமெல்லாம் மெள்ளமெள்ள கரைந்தபடி
பாங்குடனே இயற்கையரங் கேற்றுகின்ற
வைகறையின் புணர்ச்சியது என்னேயழகு!

சிறகசைத்து பறந்துவரும் பட்டாம்பூச்சி
பனித்துளியை முத்தமிட துடிக்குதுகாண்
பறவைகளில் சக்ரவாகம் அதனைப்போலே
மனமிங்கே பனித்துளிக்காய் ஏங்கிடுதே!
அறங்களிலே சிறந்ததொன்று அன்புசெய்தல்
இயற்கையின் மேலதுமட்டும் விதிவிலக்கோ?
உறவுகளில் தாய்மைபோலெ இயற்கைபுனிதம்
அதனையறியாமல் இவ்வுலகில் வாழ்க்கைவீணே!

காதலர் தினக் கவிதை

7:30 PM Posted In Edit This 5 Comments »
























அன்பே!
நீ வேண்டும் எனக்கு

இல்லாமல் போனால்
இறக்க வேண்டிய சுவாசமாய்
வாழ்வின் முழுமைக்கும்
நீ வேண்டும் எனக்கு

உலகின் பாதைக்கெல்லாம்
ஒளிதரும் சூரியனாய்
எனக்கேயான பாதைகளுக்கு
நீ வேண்டும் எனக்கு

தனிமையின் தாகத்தில்
வானம் பார்க்க
கொட்டிப்போகின்ற சிறுமழையாய்
நீ வேண்டும் எனக்கு

சோர்வில் அண்ணாந்து
பார்க்கின்ற பொழுதெல்லாம்
சொர்க்கத்தின்
சாயல் காட்டிநிற்கும்
பரந்துபோன வானமாய்
நீ வேண்டும் எனக்கு

பனி இரவில்
தீயின் வெப்பம் ஏந்தி
இரவை இதமாக்க நீ
வேண்டும் எனக்கு

உயிர்ப்புல்வெளியில்
சிதறிக்கிடக்கும்
பனித்துளிகளை
கொட்டிப்போகும் பின்னிரவாய்
நீ வேண்டும் எனக்கு

அதிகாலை காதுக்குள்
இசையில் கூச்சமூட்டும்
ஜன்னலோர குருவிகளாய்
நீ வேண்டும் எனக்கு

தோல்வி நேரத்திலும்
வெற்றியின் களிப்பு தரும்
தோட்டத்துப்பூக்களாய்
நீ வேண்டும் எனக்கு

மொட்டைமாடி பாய்விரித்து
நட்சத்திரம் எண்ணிக்கிடக்கும்
நிலவுக்குளியலில்
நீ வேண்டும் எனக்கு

உன் இன்னொரு பிள்ளை நானுமாய்
என் இன்னொரு தாய் நீயுமாய்
சாவிற்கு சற்று தள்ளியும் கூட
நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு!

தாய்க்கான கவிதை

7:21 PM Posted In Edit This 10 Comments »
























சேயின் தாய்க்கான ஒரு கவிதை!!

செந்தமிழில் நற்சொல்லாய்
சிலவற்றை தேர்ந்தெடுத்து
அதிகாலை பனிமழையில்
முதல்துளியை சேகரித்து
நள்ளிரவு விழித்திருந்து
நிலவொளியை நூல்பிரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

பொன்வண்டின் நிறம்வாங்கி
மழலையுமிழ் நீர்வாங்கி
மலரினங்கம் புணர்ந்துநின்ற
மழைத்துளிகள் சிலவாங்கி
தேன்சிட்டின் தேன்குழலில்
தேந்துளியை கடன்வாங்கி
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

தகதகக்கும் கதிரொளியும்
குளத்தின்மேல் பட்டுயெழ
முகமலர்ந்த தாமரையால்
அவ்வொளியை அள்ளிவைத்து
அதிகாலை மூங்கிலிசை
அரும்புகளில் சேகரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

சந்தனத்தின் சுகந்தத்தையும்
தென்றல்தந்த குளிர்தனையும்
நந்தவன சோலையிலே
கருவண்டின் தாலாட்டும்
அந்தியினில் மஞ்சளோடும்
ஆற்றுநீர் அழகுங்கொண்டு
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

வெண்ணிலாவும் தொட்டிராத
வானவில்லின் வர்ணங்களை
மண்ணிலிவன் தொடஎண்ணி
தோற்றுப்போன வேளைதனில்
பிச்சையிட்ட பட்டாம்பூச்சி
இறகுவண்ணம் சேகரித்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

நுரைபொங்கும் கடற்கரையின்
ஆரவாரத் துளிசிலவும்
நடுக்கடலின் தாலாட்டும்
பேரமைதி துளிசிலவும்
முகம்பார்த்து மினுமினுக்கும்
விண்மீன்கள் சிலசேர்த்து
எனதருமை தாய்க்கெனவே
கட்டிவைத்தேன் ஓர்மாலை!

அழகழகாய் பலசேர்த்து
இவன்செய்த மாலைதனை
தாயவளின் கரங்களிலே
அன்புடனே நான் கொடுக்க
வாங்கியவள் புன்னகைக்க,
அப்புனைகையின் உன்னதத்தில்
நான் தொடுத்த மாலையதோ
வெட்கியே வாடிப்போச்சு!






தாயின் சேய்க்கான ஒரு கவிதை!!

புல்லாங்குழல் இசைகேட்டேன் - அடிவயிற்றில்
பூவிரிய நான் கேட்டேன்
காய்ந்துகிடந்த கருப்பையில் - கண்ணேநீ
மழைத்துளியாய் விழக்கேட்டேன்

உயிரென்னும் வீணையதில் - தாய்மையெனும்
நரம்பினை நீ சுண்டிவிட
உச்சிமுதல் பாதம்வரை - நானடைந்த
பரவசத்தை என்சொல்வேன்?

வயிற்றில்நீ வளர்கையிலே - தோட்டத்தின்
வண்ணத்துப் பூச்சியெல்லாம்
பூதேடி என்வயிற்றில் - தினமும்
முத்தமிட்டே போனதடா!

மூன்றாம் பிறையாக - என்வயிற்றில்
நாளும்நீ வளர்ந்துவர
அடிவயிறு நிறைந்திருக்க - மார்புகளில்
மலர்மாரி பொழியுதடா!

பாலூறும் மார்பகத்தே - புதிதாய்
பனித்துளியின் பிரசவங்கள்
உயிர்தொட்ட பரவசங்கள் - பாவையிவள்
பாங்குடனே உணருகின்றேன்

மண்ணுறங்கி விண்ணுறங்கி - வெள்ளை
நிலவுறங்கா நள்ளிரவில்
சேயுறங்க அடிவயிற்றை - மெள்ளவே
தொட்டுத்தொட்டு ரசித்திருப்பேன்

சேயசையும் கணங்களிலே -அன்புடனே
புன்னகைத்து உள்திரும்பி
பிஞ்சுவிரல் பற்றிக்கொண்டு - பலப்பல
ஊர்க்கதைகள் ஆரம்பிப்பேன்

எட்டிநீ உதைக்கையிலும் - நானடைந்த
எக்காளம் என்சொல்வேன்
சோம்பல்நீ முறிக்கையிலே - எனக்குள்ளே
குறுகுறுப்பில் குதூகலிப்பேன்!

பைந்தமிழ் கவிகேட்டால் - நீயடையும்
பரவசத்தை நானுணர்வேன்
மனமயக்கும் மெல்லிசையிம் - தினமும்
நீமயங்க நானுணர்வேன்

அன்னையிவள் உணர்ச்சிகளை - அகமலரும்
உயிர்ப்பூவின் வாசமதை
வார்த்தைகளில் முழுமைசொல்ல - இவ்வுலகில்
கம்பன்வந்தும் கூடிடுமோ?

வந்தாலும் வரலாம்

7:01 PM Posted In Edit This 1 Comment »
இந்த அமைதியான இரவில்
பிரிந்திருக்கிறோம் நாம்

சாரளத்தின் வழியே
நான் காண்கிண்ற இந்த நிலா
உனதறையில் தற்சமயம்
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும்

இங்கே திரைச்சீலை அசைக்கின்ற
இதே தென்றல் உனதறையின்
திரைச்சீலைகளிடத்தும்
அதிகாரம் கொண்டிருக்கும்

கண்கள் வெறுமனே
நட்சத்திரங்களை கண்டுகொண்டிருக்க
நினைவுகளில் என்னை
சுமந்தபடி இருக்கும் உன்னைப்போலவே
நானும்..

இரவும்
விடியலை நோக்கி பயணப்பட்டு
வெகுதூரம் வந்தாகிவிட்டது
இனியேனும்
நினைவுகளில் அசதியால்
கொஞ்சம் தூக்கம்
வந்தாலும் வரலாம்

ஆனந்தம்

7:00 PM Posted In Edit This 1 Comment »
ஆனந்தம்

பறவைகள் விரிக்கும் இறகுகள் ஆனந்தம்
பகல்கள் துயிலும் இரவுகள் ஆனந்தம்
பகட்டுகள் கலவாத இயல்புகள் ஆனந்தம்
பண்பட்ட தமிழின் இனிமையும் ஆனந்தம்

நிலாதினம் உலாவரும் வான்வெளி ஆனந்தம்
நீரோடி விளையாடும் வயல்வெளி ஆனந்தம்
நித்தமும் மழலையின் வாய்மொழி ஆனந்தம்
நினைவுகள் அசைபோட வாழ்க்கையே ஆனந்தம்

சப்தங்கள் உறையும் தனிமைகள் ஆனந்தம்
சந்தங்கள் நிறையும் இன்னிசை ஆனந்தம்
சந்நிதியில் இறைவனின் தன்னருள் ஆனந்தம்
சக்தியை ஊட்டுகின்ற தியானமும் ஆனந்தம்

புலர்கின்ற நேரத்தில் புல்வெளி ஆனந்தம்
புல்வெளி பூத்திருக்கும் பனித்துளிகள் ஆனந்தம்
பனித்துளியை கவரவரும் கதிர்களும் ஆனந்தம்
புன்னகையில் சிவந்திருக்கும் கீழ்வானம் ஆனந்தம்

அலைகளை ரசிக்கின்ற கரைகள் ஆனந்தம்
அலைகள் கொட்டும் நுரைகள் ஆனந்தம்
அதிரும் கரவொலியில் பாராட்டு ஆனந்தம்
அன்புடன் தாய்பாடும் தாலாட்டு ஆனந்தம்

மாலையில் சோலையில் பட்சிகள் ஆனந்தம்
மனங்கவர் வண்ணத்து பூச்சிகள் ஆனந்தம்
மாலையில் சாரலுடன் குளிர்காற்று ஆனந்தம்
மழைத்தூறல் விழுமண்ணின் வாசனையும் ஆனந்தம்

கொட்டும் மழையினிலே நடைபோக ஆனந்தம்
கோடை வெயிலினிலே நீந்துவதும் ஆனந்தம்
கொஞ்சமும் பொய்யிலாத புன்னகைகள் ஆனந்தம்
கொட்டுகொட்டி ஆட்டமாடும் போகிகள் ஆனந்தம்

பேருந்து பயணத்தில் ஜன்னலோரம் ஆனந்தம்
பேச்சுத் துணையிருக்க நடுக்கடலும் ஆனந்தம்
பேர்சொல்லும் பிள்ளைபெற்ற தகப்பனுக்கு ஆனந்தம்
பேராசை இல்லாத மனமிருந்தால் ஆனந்தம்

சிறுவயது தோழர்கள் கண்டாலே ஆனந்தம்
சீராகச்சேல்லு மாற்றின் நீரோட்டம் ஆனந்தம்
சிந்தனையின் வந்துபோகும் கற்பனைகள் ஆனந்தம்
சிற்பிகையில் வரம்வாங்கும் கற்சிலைகள் ஆனந்தம்

திருவிழா நாட்களில் தாவணிகள் ஆனந்தம்
திருமணங்கள் நிறைத்துவரும் ஆவணிகள் ஆனந்தம்
திருப்பங்கள் அதிகமுள்ள மலைப்பாதை ஆனந்தம்
திரும்பதிரும்ப சொல்லிப்பார்க்க அவள்பெயரே ஆனந்தம்