Welcome!


உறவுகள்

7:18 PM Posted In Edit This 2 Comments »
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய
என்னுடைய வீட்டில்
நலம் விசாரிக்கும் பொருட்டு
அதிகமாகவே குழுமின
கிராமத்து உறவுகள்

நலம் விசாரித்து செல்லும் பொழுதில்
கொண்டுவந்த வெளிநாட்டு பொருள்கேட்டு
தலை சொரிய மட்டும்
எந்த உறவும் மறக்கவேயில்லை

கொண்டுவந்த பொருள் எல்லாம்
கரைந்தபின் பர்சும்
காலியாகிக்கொண்டிருந்தது
உறவுகள் உரிமையோடு கேட்ட
குவாட்டர்களுக்காகவும்!

தினமும் தொடர்ந்த செலவு
ஒருநாள் மறுக்கப்பட
வாசல் இறங்கிச் செல்ல்லும்
உறவுகளின் என்னை பற்றியான
விமர்சனம் காதில் கேட்கிறது

இவனப்பத்தி தெரியாதா?

முற்றத்து உறக்கம்

7:22 PM Posted In Edit This 0 Comments »
தென்றலின் தாலாட்டுக்கும்
நிலவின் குளுமைக்கும் மயங்கியே
என் முற்றத்து உறக்கம்

பனிவிழ ஆரம்பித்துவிட்ட
பின்னிரவில் என்னை எழுப்புகிறது
தூரத்தில் கேட்கும்
குடுகுடுப்பைக்காரனின்
ஜோசியக்குரல்!

எழுந்து வீட்டுக்குள்
செல்ல இயலாத
என்னுடைய இதயம்
துடிக்கிறது உச்சத்தொனியில்..
முட்டிக்கொண்ட சிறிநீரையும்
பொருட்படுத்தாமல்

கிழிந்த போர்வைக்குள்
காற்று புகவும் விடாமல்
கண்களை இறுக மூடி
குறுகி படுத்திருக்க
என்னை அதிகமாய்
நடுங்க செய்கிறது
குளிருடன் கலந்து விட்ட பயம்

நாய்கள் எல்லாம் எங்கே?
வாயை கட்டியிருப்பானோ?
வியர்வையைத்தான் வரவழைத்தன
அடுக்கடுக்கான கேள்விகள்

தூரத்து புகைவண்டி சத்தத்தையும்
ஆக்கிரமித்திருந்தது
என்னை நெருங்கிய
குடுகுடுப்பை குரல்

இதய துடிப்பின் விளிம்பில்
அறுந்து போக இருந்த உயிரை
கையில் எடுத்துக்கொண்டு
என் பெயர் சொல்லி அழைத்தபடி
கதவு திறந்தாள் அம்மா!

கைமணம்

7:16 PM Posted In Edit This 1 Comment »
புடைத்து புடைத்து
கல்பொறுக்க பயன்பட்ட முறமும்
தூக்கி வீசப்பட்டது
போன போகியுடன்

சோளங்குத்த ஆளில்லாத
உலக்கை
பரணுக்கு சென்றுவிட்டபின்
மூளியாய்க் கிடக்கிறது
உரல்

அடுக்களையில்
கரிபிடித்த
கடுகு டப்பாக்களை
இடம் பெயர்த்திருக்கிறது
பளபள கண்ணாடி குவளைகள்

அம்மாவின் கைமணம் மட்டும்
கருகிப்போய்விடவில்லை
என சொல்வதற்காய்
ஸ்டவ் அடுப்பில்
அடிக்கடி குளிர் காய்கிறது
அம்மா பத்திரமாய் பாதுகாக்கும்
பழைய மண்சட்டி

அவன் வந்தான்:

3:18 PM Posted In Edit This 0 Comments »
ஆண்டவன் ஒருநாள் வந்துநின்றான்
ஆட்டம் கற்றுத்தர வந்தேன் என்றான்
ஆட்டங்கள் அறியாத என்னிடத்தே
அபிநயம் பிடித்துக் காட்டிநின்றான்

நிமிர்ந்து என்னை அமரச் சொன்னான்
நாடிமூச்சில் இணையச் சொன்னான்
கண்ணிரண்டும் மூடச் சொன்னான்
உள்ளுக்குள்ளே தேடச் சொன்னான்

கண்முன்னே கடவுள் என்றான்
தவறாய் நான் புரிந்திருந்தேன்
கண்திறந்து நானும் ஆமாமென்றேன்
ஐயகோ அவனும் நொந்துகொண்டான்

சொன்னபடியே செய்து பார்த்தேன்
மனதில் ஒருகணம் வந்து போனான்
இழுத்துப்பிடித்து தொடர்ந்திடவோ
இவனுக்கு ஏனோ முடியவில்லை

நினைக்கும் பொழுது அழைக்கச் சொன்னான்
வீட்டின் வழியும் சொல்லிப் போனான்
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தால்
வானில் நிலவாய் சிரித்திருந்தான்

பூப்பறித்து பழக்கமில்லை..

3:16 PM Posted In Edit This 3 Comments »


சிரித்துக்கொண்டே வாடிப்போன
நேற்றைய பூக்களின்
விலாசத்தை தாங்கிக்கொண்டு
இன்றைய அரும்புகள்!

* * * *

காலமாற்றத்தில்
மாறாத கால்த்தடங்களில்
உருவாக்கப்பட்ட பூவாசங்கள்!

* * * *

எனக்காக பூக்கின்றன
பூக்கள்!
அவர்களுக்காய்
நானும் எனது புன்னைகையும்
எனது சில கவிதைகளும்!

* * * *

கூடைகளில்
பூ நிரப்பி பழக்கமில்லை
நுரையீரலில் மட்டும்
வாசங்கள்!

* * * *

பூஜையறையில்
ஆண்டவனிடமும் சொல்லிவிட்டேன்
பூப்பறிப்பு என் பழக்கமில்லை
பூவாசம் வேண்டுமென்றால்
எழுந்து வா தோட்டத்திற்கு!

* * * *

நண்பன்!

2:47 PM Posted In Edit This 3 Comments »

எனக்கொரு நண்பன்

ஆண்டவனின்
நட்பெனும் மாலையில்
அருகருகே கட்டப்பட்ட
இரு மல்லிகளாய்
நாங்கள்!

மூக்கு ஒழுகிக்கொண்டு
சுற்றிய நாட்களிலேயே
அரும்பான நட்பு
நாங்கள் வளர
அதுவும் வளர்ந்தது

அவனுடைய
ரமலான் நோன்புக்கும்
அம்மாவிடம்
சாப்பிட்டதாய் பொய்சொல்லி
நான் எச்சில் விழுங்காமல்
இருந்ததையும்,

எனக்கு பிடித்த கொழுக்கட்டை
அவன் அம்மா செய்து வைக்க
எனக்காய் எடுத்துக்கொண்டு
ஓடி வருததையும்

இன்றும் நினைத்து
என்னால் கர்வப்படாமல்
இருக்க முடிவதில்லை.

கிடைத்த ஒரே பொன்வண்டையும்
எனக்காக கொண்டுவந்தவன்

எங்கள்வீட்டு சரஸ்வதி பூஜையில்
புத்தகம் கொண்டுவந்து
அழகாய் பொட்டிட்டு வைப்பவன்

உயிர் காத்த தோழன்தான்..
காட்டாற்று ஓடையில்
நீச்சல் தெரியாத நான்
ஆர்வத்துடன்
கால்வைத்த போதிலும்..

இன்று காலவெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
இருவேறு திசைகளில்
அவனும் நானும்..

நீச்சல் தெரிந்தும்
போய்க்கொண்டிருக்கிறோம்
அலைகளின் போக்கில்..
காலத்தின் தந்திரத்தில்..

அறிவியல் வளர்ச்சியில்
உலகில் யாவரையும்
அதிகப்படியாய்
அடுத்த நாளில் காணலாம்
என்றாலும்...
அடுத்த நாளின் தீர்மானங்கள்
கடமைகளின் காலடியில்தான்
கட்டப்பட்டு கிடக்கின்றன

காத்திருப்போம்..
நாட்கள் அதிகமில்லை..
அதிகப்படியாய் தள்ளாடும் வயது
மீண்டும் கைகோர்த்தபடி ரசித்திருப்போம்
அதிகாலை நிலவையும்
அந்தி வானத்தையும்..
அதே பழைய படகில் இருந்தபடியே!

மயானம்

3:31 PM Posted In Edit This 0 Comments »


எல்லாமே
தத்துவம்தான் இங்கு

புயலுக்குப் பின்னே அமைதியென
இயல்பாகவே
தத்துவம் சொல்லி நிற்கிறது
மயானம்

ஞானச் சாரளத்தின் வழி
பசியுடன் நிலவைத்தேடும்
சில பல மனிதர்களின்
பெளர்ணமி

பிரபஞ்சத்தின்
அமைதியும் அதிர்வும்
பூமித்தடாகத்தில்
முத்தமிடும் தடங்கள்

இங்குவந்தபின் கண்டவர் சிலர்..
வராமலும் கண்டவர் பலர்..
இங்கு எற்றப்பட்ட
ஒவ்வொரு முழுகுவர்த்தியும்
ஒருவனுக்கு ஞானப்பாதை
காட்டியது என்றாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை

முட்டிமோதி சிரித்து நடிக்கும்
தாகமான வாழ்க்கையின்
எதிர்ப்புறத்திலான ஒரு வாசல்
இங்குதான் எங்கேயோ
ஒளிந்து கொண்டிருக்கிறது..

பிறவி இருளை
கிழித்துக் காட்டுகிற
ஒரு மின்மினிப் பூச்சிகூட
இங்குதான் சுற்றிக்கொண்டிருக்கிறது
தவத்துடன்.

இறுதியாய்..
இங்கு வந்த ஒவ்வொருவனின்
இறுதிப் பயணத்திலும்
அவனுக்கு முன்
ஆட்டமாடி வந்தவனும்
தத்துவம் ஒன்றை
சொல்லிவிட்டுத் தான் போனான்.

'எங்கோ தொடங்கி
எஙகெங்கோ சுற்றிக்கொண்டு
மயானத்தில் முடித்துக்கொண்ட
ஆட்டத்தில்!'

நிலவு - 3

7:12 PM Posted In Edit This 1 Comment »
கண்ணாடி காணும்போதெல்லாம்
நெற்றிப்பொட்டை சரிசெய்து
அழகு பார்க்கும்
கன்னிப்பெண்ணின் சாயலில்
சாலையோரம் தேங்கிய மழைநீரில்
முகம்பார்த்து மகிழ்கிறது
நிலவு.

அரவாணி

11:27 PM Posted In Edit This 5 Comments »
ஆண்டவன் தொடுத்த மாலையிலே
உதிரிப்பூக்கள் நாங்கள்தாம்
அவனே படைத்த புத்தகத்தில்
அச்சுப்பிழைகள் நாங்கள்தாம்

உதிர்ந்த பூவுக்கும் மணமுண்டு
எங்களுக்கும் ஓர் மனமுண்டு
அதனைப் புரிந்து நட்புடனே
புன்னகை புரிந்திட யாருண்டு?

அருமை அண்ணன் ச்சீ என்றான்
அன்பு அப்பா போ என்றார்
அலறித் துடித்து அம்மா மட்டும்
ஆண்டவனிடத்தில் ஏன் என்றாள்

ஏளனப் பார்வையும் கிண்டல்களும்
எவ்விடமிருந்தும் வருகிறதே
ஏக்கப்பார்வையை எங்கள் முகத்தில்
எத்தனை நாள்தான் வைத்திருப்போம்?

அடிப்படை உரிமைகள் எமக்கில்லை
அங்கீகாரங்கள் எதுவுமில்லை
வறுமைப் பிடியில் தவிக்கின்றோம் எங்கள்
திறமையை யாரும் பார்ப்பதில்லை

தேவை உங்கள் பிச்சையல்ல
பாலியல் தொழிலும் தேவையல்ல
திறமை கண்டே மதித்திடுக
நட்புடன் புன்னகை செய்திடுக

தனிநாடு எதுவும் கேட்கவில்லை
ஆட்சியில் பங்கும் கேட்கவில்லை
அடிப்படை உரிமைகள் மட்டேனும்
அன்புடன் எமக்கு தந்திடுக.

புதுமைப்பெண்?

8:20 PM Posted In Edit This 1 Comment »
தலமேல மண்சட்டி வயித்துக்குள்ள பொட்டப்புள்ள
இப்படித்தான் நானிருக்கேன் எறத்தாழ அஞ்சுவருசம்
பெத்த வீட்டுலயும் பவுசாத்தான் நானிருந்தேன்
தாலி வாங்கும்போதே தலயெழுத்தும் மாறிடுச்சு

கைபுடுச்ச பொண்டுப்பய மேஸ்திரின்னு சொல்லிக்குவான்
காசுபணம் சேந்துப்புட்டா சீட்டாடித் தோத்துடுவான்
அஞ்சுரூவா பத்துரூவா செங்கச்சுமந்து கொண்டுபோனா
அதயும் புடுங்கிக்கிட்டு சாராயம் குடிச்சிருவான்

வக்கனையா பெத்தாச்சு மொத்தம் நாலுபுள்ள
பசிக்கு அழும்போது கஞ்சிகுடுக்காட்டி பாவமில்ல?
கல்லுடைக்க மண்சுமக்க உடம்புல தெம்பிருக்கு - அவன்
காசவந்து புடுங்கும்போது போராட தெம்புயில்ல

புள்ளைக்கு மனசுரொம்ப சோறுபோட்டு நாளாச்சு
தினமும் சாப்பாடோ கவர்மெண்ட் சத்துணவு
பாவிப்பய இவன்மட்டும் எங்காசும் புடுங்கிப்போயி
தினமும் குடிச்சுப்புட்டு என்னயப்போட்டு அடிக்கிறான்

இன்னைக்கி ஜெயிச்சுட்டேன் புள்ளைக்கெல்லாம் சுடுசோறு
வயிறார சாப்பிட்டுட்டு சீக்கிரமா தூங்குங்கடி
மனசார முடிவெடுத்தேன் புருசன் எனக்கு வேணாம்ணு
மாரியாத்தா மன்னிச்சுக்கோ அவன்சோத்துல விஷமிருக்கு.

பங்கு கேளு அய்யனாரே,

3:14 PM Posted In Edit This 1 Comment »










அய்யனாரே,

நேற்றுவரை
கருவேலங்காட்டில்
நிழலுக்காய் உன் சிலையடியில்
ஒதுங்கிய ஆடுகள்,
இன்று உன் முன்னாலே
வெட்டப்படுகின்றன

உனக்குப் படையலாம்,

யாராருக்கு எது தின்ன ஆசையோ
அதற்கெல்லாம் நீ தான்
நல்லதொரு ஊமைக்காரணம்

கேட்டால்,
கொடுமைகளைக் கொல்பவனாம் நீ.
பச்சைரத்தம் குடிப்பவனாம் நீ
தவறான மனிதர்களின்
தவறான புரிதல்கள்!

வாயில்லாத ஆடு
கொடுமையாகவும் தெரியவில்லை
படைத்த இரத்ததை நீ
குடித்ததாகவும் தெரியவில்லை

இதுவரை காவல் காத்தாய்,
கொடுமைகளை ஊருக்குள் விடாமல்,
இனியும் காவலிரு,
கொடுமைகள் வெளியே
சென்றுவிட வேண்டாம்.

நீ காவல்காரன் தான்.
உன்னை நீ காத்துக்கொண்டாய்,
ஊருக்கு வெளியே,
மனிதரிடம் விலகி.

கொட்டுமேளத் திருவிழாக்கள்,
சாராய ஆட்டங்கள்,
பலிகள் பல, படையல் பல,
ஒருமுறை நேரில்வா,
பாதி ஆடு பங்கு கேள்,

அன்றுமுதல்
ஆடுகள் வெட்டப்படும்,
அவனவன் வீட்டு
அடுக்ககளையில்.

ஆழிப்பேரலை

1:00 PM Posted In Edit This 0 Comments »


கோயில்குளம் கண்டதில்லை
கோபுரங்கள் வணங்கவில்லை
கோலக் கடத்தாயே - உனை
கொஞ்சமா வணங்கி நின்றோம்?
கொஞ்சவந்த பிள்ளையிடம் - ஏன்
கோரமுகம் காட்டிவிட்டாய்?

விதைத்தது விளைந்தது மற்றும்
வளர்ந்ததையும் கொண்டுசென்று
புதைக்கவும் மனமின்றி - ஏன்
வழியெல்லாம் இறைத்துவிட்டாய்?
கதைக்கின்றேன் கடல்த்தாயே - உனைவிட
சிசுக்கொலையும் சிறந்ததடி.

நாளும் உன்வீடு வந்தோம்
வளம்பல அள்ளிவந்தோம்
தாய்வீட்டு சீதனம் இதுவென - நாம்
மார்தட்டி கொண்டுவந்தோம்
திடுடனென நினைத்தாயோ - எமை?
வாளேந்தி வந்துவிட்டாய் வாசலுக்கே!

பச்சைரத்தம் வேண்டுமென்று என்காதில்
பக்குவமாய்ச் சொல்லிவிட்டால்
பாவியென் கழுத்தறுத்து - தேவி
பலியுடனே படையல் வைப்பேன்
நெற்பயிரில் யானையென - நீ
மேற்கே கிழக்காய் பேயாடிவிட்டாயே!

வஞ்சமில்லா பிஞ்சுகளும் உன்மடியில் அவை
கட்டிய மணற்கோட்டைகளும்
வாஞ்சையுடன் ஆயிரமாய் மக்கள்பலர் - அவர்
கட்டிய மனக்கோட்டைகளும்
பூஞ்சைபடிந்த உன்வயிற்றில் - சிக்கி
அழுகித்தான் போனதுவோ?

கரம்பிடித்த மனையெங்கே பயத்தில்
கால்பிடித்த பிள்ளையெங்கே?
பிள்ளையின் இறுதிமுகம் பார்க்கவும் வழியின்றி
உயிர்விடும் அவலம் இங்கே
கடல்தாயே ஒன்றுசொல்வேன் உண்மை - இன்று
நான் அனாதைப் பிணமல்ல..

என்னுடன் ஆயிரமாய் மேலும் கீழும்
பிணக்குவியல்கள்........




தாண்டவம் ஆடிவிட்டு - இங்கு
அமைதியாய் தவழ்கிறேன் என்றே
கண்டிடும் மாந்தரெல்லாம் - எனை
வெறுப்புடனே முறைக்கின்றார்

கண்ணீர் வந்தால்கூட - பாவி
கடல்மட்டம் உயருமென்றே
தொண்டைக் குழியிலே - என்
துக்கமெல்லாம் கொட்டிவைத்து
அடிமனதில் அழும்சத்தம் - அங்கு
யாருக்கும் கேட்கலியா?

தடுக்கி விழுந்தேனென - தலையடித்து
கதறிடும் ஓர்சத்தம்
சத்திய வார்த்தைகளாய் - உன்காதில்
சங்கொலியாய்க் கேட்கலியா?

ஓருயிரை பறிகொடுத்தால்
உயிர்விடும் தாயொருத்தி
ஆயிரமாய் பலிகொண்டால்
அடுத்தகணம் தீக்குளிப்பாள்
அடிவயிற்றில் உள்ள உயிர்
ஆயிரங்கள் கோடியம்மா..

பாவம்தீர இந்தத்தாயும்
எப்படித்தான் தீக்குளிப்பாள்?

நிலவு

11:56 AM Posted In Edit This 0 Comments »


தனிமைக் கவிதையை
நான் என்னுடன்
வாசிக்கும் பொழுதெல்லாம்
எட்டிப்பார்த்து வாசித்தபடி,
அந்த நிலவு.

இயற்கை ஓவியங்கள்

7:51 PM Edit This 0 Comments »
தமக்கேயான தனிப்பட்ட வரையறைகள்
தாங்கினவையாய் இருக்கின்றன
இங்கேயுள்ள முகங்களனைத்தும்

ஒற்றை நூலினால் இவ்வனைத்தையும்
ஒன்றாய்க் கட்டிவிடுதல் சாத்தியமெனினும்
யாவருக்கும் அதில் உடன்பாடில்லை

தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீண்ட நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும்
கிழித்துப்பார்க்கிறேன்

வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்திருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!

அம்மாவுக்கு..

7:44 PM Posted In Edit This 1 Comment »





















தாயுந்தன் துன்பங்களை நானின்று நினைக்கையிலே
நெஞ்சினிலே நெருஞ்சிமுள் நெருக்கென்று தைக்கிறது
காலெட்டா வயதினிலே தறியிறங்கி பணிசெய்தாய்
நூல்தொட்டா அறுந்துவிடும் அதுதிரித்து துணிநெய்தாய்!

விளையாடும் வயதினிலே ஓடோடி உழைத்துநின்றாய்
தாய்வீட்டுக் கடனடைக்க ஓடாய்நீ தேய்ந்துநின்றாய்
தம்பிதங்கை வளர்த்திடவே கல்விதனை இழந்துநின்றாய்
அச்சிறு வயதினிலே அன்னையாய்நீ மாறிநின்றாய்!

குடிகார கணவனுடன் நல்வாழ்வு வாழ்ந்திடவே
குடிபுகும் புதுமனையில் பொறுமைதான் கொண்டுவந்தாய்
மாமியார் வசவுக்கெல்லாம் வாய்மூடி இருந்துவிட்டாய்
மக்களெம்மை பெற்றுநீயும் பண்புடனே வளர்த்துவிட்டாய்!

காலினிலே நெஞ்சினிலே நோய்நொடிகள் தைத்துநிற்க
மனங்கொண்ட தைரியத்தால் அத்தனையும் வென்றுவந்தாய்
பிள்ளைகளும் ஆளாகி குடும்பமென ஆகிவிட்டோம்
ராணியென வைத்திடவே நாங்களின்று ஆசைகொண்டோம்

நல்லசோறு தின்னவில்லை நீநல்லதுணி கட்டவில்லை
இன்றதற்கு வழியிருக்கு இஷ்டம்போல் வாழென்றால்
உந்தனையும் வாழ்வினையும் இருக்கூறாய்ப் பிரித்தபடி
விதியின் பேர்சொல்லி நோய்நொடிகள் தடுக்குதம்மா

சந்தோசம் எனும்சொல்லை எட்டநின்று காணலன்றி
உந்தோசம் நீங்கும்வரை உவப்புடன்நீ குளித்ததில்லை
கணக்கில்லா கஷ்டத்திலும் இப்பொழுதும் சொல்கிறாய்
"எனக்கென்ன குறைச்சல், முத்துப்போல் மூணுபிள்ளை!"

ஞானமாய் இருக்கக்கூடும்!

10:46 PM Posted In Edit This 1 Comment »












அதிகாலைக் கனவொன்றின்வழியே
பறந்துவந்ததொரு வெள்ளைப்பட்சி
கூரையற்ற வீட்டின் விட்டத்தில்
ஆசுவாசமாய் வந்தமர்ந்தது
எனக்கான தன் கேள்வியுடன்


இதுவரை நான் யோசித்திராத
பிறப்பின் காரணம் கேட்ட
அதன் கேள்விக்கு
சற்றே குழம்பித் தெளிந்தவனாய்
பிறர்க்கு உதவிடலென பதில் சொன்னேன்..

ஓரறிவு மரம் செய்யுமதனையென
அது புன்னகைத்தபடியே சொன்னபோது
ஒப்புதலில் தலைகவிழ்ந்தேன்

அன்பு செயதலென சொல்ல விழைந்து
அதற்கு ஐந்தறிவே போதுமென அமைதியானேன்
பின், இன்றியமையாத் தேடலொன்றின் பாதையை
கனவின் அப்புறத்தில் கண்டபொழுது
தீர்க்கமான நிழலொன்று கூரைமேவிநின்றது

தாவிப்பறக்கும் பட்சியிடம் பெயர் கேட்டேன்
தேடிக்காண வேண்டுமெனச் சொல்லிப் பறக்கிறது.

ஞானமாய் இருக்கக்கூடும்!

மரணமொன்று வரக்கூடும்!

8:04 PM Edit This 0 Comments »





















சாளரத்தின் அப்புறச்சாலையில்
தெறிக்கும் பார்வைகளேந்தி
ஒதுக்கப்பட்டதோருலகின்
ஒற்றைப் பிரதிநிதியாயிருக்கிறேன்

அடிவயிற்றில் நீ உதைத்த சுவடுகள் முதல்
இக்கணத்திலான உதாசீனங்கள் வரை
இறைந்துகிடக்கும் நினைவுகளை
ஒவ்வொன்றாய் சேகரிக்கிறேன்

நீ பால்குடித்த மார்பகங்களின்
ஏளனங்கள் தாளாது
தனித்திசையில் வெற்றுப்பயணமேகிறேன்

மடியில் நீ
மணிக்கணக்காய் உறங்குகையில்
அசையாது மரத்துப்போன கால்கள்
மெதுவாய் அசைகின்றன மனதில்

வாரமொருமுறை
வருவதற்கான உன் உத்திரவாதம்
மாதங்கள் விழுங்கிக் காத்திருக்கிறது

அத்தனை கஷ்டத்தினூடும்
உன்னைப்படிக்க வைத்த படிப்பில்
தாயைப்பற்றி ஒருவரி இல்லாமற்போனதுதான்
பரிசீலனைக்குரியதாயிருக்கிறது

பரவாயில்லை..
அறைக்கதவு திறந்தேயுள்ளது
நீ வருவதற்கான சாத்தியங்கள் குறைவெனினும்
கட்டாயங்களின் பொருட்டு
எந்நேரமும் மரணமொன்று வரக்கூடும்!