Welcome!


மீட்பு

9:52 AM Edit This 6 Comments »
இச்சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்கென எழுதப்பட்டது. சுட்டி : http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html


பவுனு வந்திருப்பதாக அம்மா வந்து சொன்னவுடன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு குடிப்பதற்காக சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் அம்மா. குடித்தமீதி தண்ணீரில் முகத்தைக் கழுவி உடுத்தியிருந்த கைலியிலேயே குனிந்து முகம் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் என்னைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தான்.

" ஏ.. வாடா பவுனு, எப்பிர்ரா இருக்கே " என்றபடி அவன் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்தபோது " பரவாயில்லடா, திண்ணயிலயே உக்காரலாம் " என்று சொல்லி அமரப்போனவனை சரிதான் வாடா என்று உள்ளே இழுத்து வந்தேன். சோபாவில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு அதில் அமரச் சொன்னேன். அருகே நின்றிருந்த அம்மா ஏதாவது நினைத்துக்கொள்ளக்கூடும் என்று தயங்கியபடியே நின்றான்.

அவனது அம்மா தங்கச்சி எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்துவிட்டு அம்மா உள்ளே சென்றுவிட்டாள். அப்பொழுதும் அமராமல் நின்றுகொண்டிருந்தவனை " ஒத வாங்கப்போறடா நீ , உக்காரு " என்றபடி தோளை அழுத்தி உட்கார வைத்தும்கூட சோபாவின் நுனியிலேயே அமர்ந்திருந்தான். அவ்வளவு சொல்லியும் வீட்டுக்குள் அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. அவனும்தான் என்ன செய்வான், பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வீட்டிற்குள்ளேயே வந்திருக்கிறான்.

சரி, பரவாயில்லை என்று கடைசியில் திண்ணைக்கே வந்தோம். அம்மா காப்பியும் முறுக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்டுக்கொண்டே தெருவை வேடிக்கை பார்த்தபடி சென்றமுறை பார்த்ததற்குப் பின்பு நடந்த அனைத்து கதைகளையும் பேசிக்கொண்டிருந்தோம்.

பவுனை எனக்கு இரண்டு வயதிலிருந்தே தெரியும். என் பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரையும்விட எனக்கு முதன் முதலாக அறிமுகமானவன் அவன்தான். இத்தனைக்கும் அவனுக்கு எங்கள் ஊர் கிடையாது. எங்கள் ஊருக்குத் தெற்கில் ஆற்றைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வயலி தான் அவனது ஊர். அவனது அம்மா மாடத்தி எங்கள் ஊரில் பல வீடுகளுக்கு துணி வெளுக்கும் வண்ணாத்தி. எனக்கு விபரம் தெரிய எங்கள் வீட்டுக்கும் அவள்தான் துணி வெளுத்தாள். அவள் வெளுத்துக் கொண்டுவரும் உவர்மண் கமகமக்கும் துணிகளை முகர்ந்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அப்பொழுதெல்லாம் ஆற்றிலிருந்து ஒற்றையடிப்பாதை வழியே ஊருக்குள் வரும்போது எங்கள் வீடுதான் முதலாவதாக இருக்கும். பகலில் அழுக்குத் துணியெடுக்க வரும் போதும் இரவில் சோறெடுக்க வரும்போதும் இரண்டு வயது பவுனை இடுப்பில் சுமந்துகொண்டு அந்தப் பாதை வழியாகத்தான் வருவாள் மாடத்தி.

" பொதியோட புள்ளயயும் தூக்கி ஊரெல்லாம் சொமக்காட்டத்தான் என்ன, இங்கனக்கூடி விட்டுட்டுப்போ மாடத்தி, அவம்பாட்டுக்கு இங்கனக்கூடி வெளயாடிட்டு நிப்பான்..நான் வேண்ணா பாத்துக்கிடுதேன்.. " என்று ஒருநாள் அம்மாதான் சொன்னாளாம். ஆச்சியோ ஐயாவோ திட்டிவிடுவார்களோ என்று முதலில் தயங்கியவள் அம்மா மறுபடியும் சொல்லக்கேட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் பவுனை விட்டுவிட்டுப்போக ஆரம்பித்தாளாம். பின்பு அதுவே வழக்கமாகிவிட்டதாம். நானும் அவனும் ஒரே வயது எனபதால் திண்ணையில் சண்டை போடாமல் விளையாடிக்கொண்டிருப்போம் என அம்மா சொல்லியிருக்கிறாள்.

எக்காரணம் கொண்டும் தான் திரும்பி வரும்வரைக்கும் திண்ணையிலிருந்து இறங்கவும் கூடாது வீட்டுக்குள் போகவும் கூடாது என்று மாடத்தி பவுனிடம் கறாராகச் சொல்லிவிட்டுச் செல்வாளாம். அவனும் அவ்வளவு கெட்டிக்காரனாக திண்ணைவிட்டு இறங்காமல் விளையாடுவானாம். ஒரு நாள் மழைபெய்தபோது கூட திண்ணையில் சுவரோரம் ஒண்டிக்கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தவனை அம்மா இழுத்துவந்து வீட்டுக்குள் வைத்திருந்தாளாம். அப்பொழுதும் கூட நான் திண்ணைக்குப் போகணும் என்று அடம்பிடித்து ஓடிவிட்டதாக அம்மா சொல்வாள்.

நான் கல்லூரி விடுதியிலிருந்து தீபாவளி பொங்கல் விடுமுறைகளுக்கு ஊருக்கு வருவேன் என்று அவனுக்குத் தெரியும். வருடத்தில் அந்த சமயம் மட்டும்தான் அவனுக்கும் லீவு கிடைக்கும் என்பதால் அவனும் ஊருக்கு வருவான். வரும்போதெல்லாம் சைக்கிள் எடுத்துக்கொண்டு எப்படியும் என்னை பார்க்க ஒருமுறையாவது வீட்டுக்கு வந்துவிடுவான். ஆனால் எப்பொழுது வந்தாலும் திண்ணையில் தான் உட்காருவான். அம்மா அழைத்தாலும்கூட வீட்டுக்குள் வரமாட்டான்.

இதேபோல் தான் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு பல கதைகளும் பேசிக்கொண்டிருப்போம். அப்பொழுதெல்லாம் சிறு வயதில் இதே திண்ணையில் விளையாடியது ஞாபகம் இருக்கிறதா என்று சிரித்துக்கொண்டே கேட்பான். என்ன என் ஞாபகசக்தியோ, அந்த நாட்கள் ஒன்றுகூட எனக்கு ஞாபகம் இருந்ததே இல்லை. ஆனால் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். நான் ஒருமுறை திண்ணையிலிருந்து அவனை கீழே தள்ளிவிட்டதைக்கூட ஞாபகம் வைத்திருந்தான்.

மாடத்தி துணி வெளுக்கும் காலத்தில் கைமாத்தாக பணம் ஏதும் வேண்டுமென்றால் அம்மாவிடம் தான் கேட்பாள், பத்து ஐம்பது என தேவைக்கு வாங்கிக்கொண்டு அப்புறம் கொடுத்தும் விடுவாள். ஒருநாள் அவளுக்கு பணம் கொடுப்பதை பார்த்துவிட்ட ஆச்சி அம்மாவை திட்டினாளாம். மாடத்தியிடமும் " இப்டி சும்மால்லாம் கைமாத்து வாங்கிற வேல வச்சுக்கிடாத " என்று சொல்லிவிட்டாளாம். அதிலிருந்து பணமேதும் தேவைப்பட்டால் வீட்டிலிருந்தே தவலைப்பானை, குத்துவிளக்கு என எதையாவது தூக்கிக்கொண்டு வருவாள். ஆச்சியிடமே அடகுவைத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வாள். அதில் திருப்பாமலேயே போய்விட்ட பெரும்பாலானவை இன்னும் அரங்குவீட்டில் பழைய பாத்திரங்களோடு கிடக்கின்றன.

பள்ளிக்கூடத்திலும் நானும் பவுனும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் தினமும் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வருவான். வகுப்பிலும் என்னை மட்டும் தான் வாடா போடா என்று பேசுவான். மற்ற அனைவரையும் சமவயது பையன்கள் என்றாலும் 'ஐயா' என்று பேசுவான். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் ஒருநாள் அவனே அதைப்பற்றி என்னிடம் பேசினான்.

" டேய், எங்கம்மா என்னய திட்டுதுடா, உன்னயும் ஐயான்னுதான் கூப்பிடணுமாம்.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. "

" அவங்க சொன்னாங்கன்னு என்னயல்லாம் அப்டி கூப்புடாதடா.. எனக்கு புடிக்காது.. " என்றேன்.

ம்ம் .. என்றபடி அமைதியாக இருந்தவன் " உனக்குத் தெரியுமா, மொதலியாருக வீடுகள்ளயே நான் வீட்டுக்குள்ள வரைக்கும் போனது உங்க வீட்ல மட்டும்தாண்டா, உங்க அம்மா மட்டும்தான் எனக்கு காப்பில்லாம் போட்டு குடுத்திருக்கு " என்றான்.

" அதுக்கென்னடா இப்போ, நீ வேற பேச்சு பேசுடா " என்றதும் அமைதியாகிவிட்டான். அதன்பிறகு நானோ அவனோ அப்படிப்பட்ட உரையாடலை எப்பொழுதும் பேச விரும்பவில்லை.

பவுனும் நன்றாக படித்தான் தான். எப்படியென்று தெரியவில்லை, ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகிவிட்டான். அதன்பிறகு பள்ளிக்கூடத்திற்கே வரவில்லை. எப்படியாவது பத்தாவதும் எழுதி, ஃபெயிலானாலும் பரவாயில்லை, ஏதாவது சர்க்கார் ஆபீஸ்ல பியூன் வேலையாவது வாங்கிவிடலாம் என்று மாடத்தி எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். ம்ஹூம்.. எதுவும் நடக்கவில்லை. பெயிலாகிவிட்ட பிறகு அதே பள்ளிக்கூடத்தில் போய் படிக்கவே மட்டேன் என்று ஒரே முடிவாகச் சொல்லிவிட்டான்.

வீட்டில் சும்மா இருந்தவனை அவனது மாமா அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் ஒரு பரோட்டாக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் இராணுவ விடுதி ஒன்றில் துணி தேய்க்கும் வேலை கிடைத்துவிட்டதாக ஒருநாள் மாடத்தி வந்து சொன்னாள்.

இந்தமுறை வீட்டுக்கு வந்தவன் தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், பொங்கல் முடிந்தவுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் வைத்திருப்பதாகவும், அதற்காகவே பொங்கலுடன் ஒருவாரம் லீவு சேர்த்து எடுத்திருப்பதாகவும் சொன்னான். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நானும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னான்.

விஷயத்தைக் கேட்டு அம்மா மிகவும் சந்தோசப்பட்டாள். பொதுவாக எங்கள் ஊரில் யாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களிலோ அவர்களும் எங்கள் வீட்டு விசேஷங்களிலோ கலந்துகொள்வதில்லை என்பதால் அம்மா பத்திரிக்கை வைப்பான் என்றோ கல்யாணத்திற்குச் செல்ல வேண்டுமென்றோ எதிர்பார்க்கவில்லை. மாடத்தியை என்றாவது கண்டால் எல்லாம் நல்ல படியாக நடந்ததா என்று கேட்டுக்கொள்வாள். ஆனாலும் நான் நிச்சயத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன். விடுமுறை கிடைத்தால் கல்யாணத்திற்கும் கண்டிப்பாக வருவதாகச் சொன்னேன். பவுனும் மிகவும் சந்தோசப்பட்டான்.

உட்கார்ந்து கதைபேசிகொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. " சர்டா, நான் வரட்டுமா " என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானவனை ஒரு நிமிடம் உள்ளே வாடா என்று அழைத்தேன். அம்மாவிடம் சொல்லிவிட்டு அரங்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த, நிறம் மங்கியிருந்த குத்துவிளக்கை அவன் கையில் கொடுத்து, தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் செய்யும்போது இதையும் பாலிஷ் செய்து கொடுத்துவிடு என்று சொன்னேன். அவனும் வேண்டாமென்று சொல்ல நினைத்து, பின் தயங்கி கையில் வாங்கிப் பார்த்தான். அந்த குத்துவிளக்கை அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்க வேண்டும்.

குத்துவிளக்கின் கீழ்த்தட்டில் சுற்றிலும்" மாடத்தி கல்யாணத்துக்கு தகப்பன் பெரியகருப்பன் சீர் குடுத்தது" என்று பெயர் வெட்டியிருந்தது.

அவன் ஆச்சரியமும் கேள்வியும் நிறைந்தவனாக என் முகத்தைப் பார்த்தபடியே அவனையும் அறியாமல் சோபாவில் நன்றாக சரிந்து உட்கார்ந்தான்.

32 கேள்விகளும் எனது பதில்களும்..

12:46 PM Edit This 9 Comments »


என்னை தொடர் பதிவிற்கு அழைத்த அன்பு நண்பன் சகபதிவர், ஒளியவன் பாஸ்கருக்கு மிக்க நன்றி..
எனது பதில்கள் இனி ...

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
நானே எனக்கு வைத்துக்கொண்ட பெயரிது. எனக்கு கண்ணனை மிகவும் பிடித்தவன். கோகுலமும் அங்கே நடக்கும் ராசலீலையும் பிடிக்கும்.. ( தயவுசெய்து ராசலீலையின் உண்மையான அர்த்தம் தேடிப்புரியவும்..:))
என் பெயர் எனக்கு பிடிக்குமா: சொந்தபெயர் பூமாரி அந்தோணிராஜ். ஆரம்பத்தில் பூமாரி என்ற பெயர் அதிகம் பிடிக்காமல் இருந்தது. ஆனால் எப்பொழுதுமே என்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அப்பெயரை கொண்டாடியே வருகிறார்கள். இப்பொழுது பல நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்க பூமாரி என்ற என் சொந்த பெயரிலும் ஆங்கில, தமிழ் கவிதைகள் எழுதுகிறேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இரண்டு மாதங்களுக்கு முன். (மனிதர்கள் முன் பொதுவாக நான் அழுவதில்லை.. இருப்பினும் இப்படியொரு சில தவிர்க்க இயலாமல் போகிறது )
அது தவிர சர்ச், கோவில் சந்திதானங்களில் அழுகையை என்னால் அடக்க முடியாது. மேலும் அவ்விடங்களுக்கு வெகு தனியாகச் செல்வதே வழக்கம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடித்திருக்கிறது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
காரமில்லாத எந்த சைவ உணவு ஆனாலும் சரி..
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சாதம் பாசிப்பருப்புக் கூட்டு, கேரட் பொரியல், கீரை, பால்சோறு மற்றும் வறுத்த சுண்டை வத்தல் / மோர்மிளகாய்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
முதலில் தயங்குவேன். பழக ஆரம்பித்துவிட்டால் மிகவும் நன்றாக பழகுவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவிதான்.. அதும் மதிய வெயிலில் யாருமற்ற அருவியில் .. அட அட..
கேள்வியில் ஆற்றையும் சேர்த்திருக்கலாம். தாமிரபரணி நாட்கள் வாழ்வில் மறக்க முடியாதவை.
தற்சமயம் வீட்டு நீச்சல்குளத்தில் இரவுகளில் நீந்தி சோர்வது மிகவும் பிடித்திருக்கிறது..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாக பேச்சு.. கவனம்.. பந்தாவற்ற எளிமை..
நேருக்கு நேர் பேசும்போது, கண்கள்.. மற்றும் கண்முடிகள்.. சிகை அலங்காரம் கவனிப்பேன்..
வளைந்த கண்முடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. கண்களில் / முகத்தில் அழகே அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது என் எண்ணம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
ரொம்ப பிடித்த விசயம்னா, கொஞ்சம் பயின்றிருக்கும் / பயின்று கொண்டிருக்கும் யோகம் / தியானம்
பிடிக்காதது : பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபிறகு, அத ஏந்தான் கூட வச்சுக்கணும்? திருத்தணும், அது திருந்தவே திருந்தாதுன்னா விட்டுடணும்.. சரிதாணுங்களே..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரிபாதியையே இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்கேன். மேற்படி இனிமே தான் கண்டுபிடிக்கணும்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பக்கத்துல யாரும் இல்லாததுக்காக எப்பவுமே வருந்துறதில்லை. உலகத்துல வரும்போதும் தனியாத்தான் வந்தோம்.. போகும் போதும் அப்படித்தானுங்களே.
இக்காலத்தில் உடல்நிலை சரியில்லாத அம்மா பக்கத்துல நான் இருக்க முடியலைன்னுதான் கொஞ்சம் வருத்தம். அதும் அடுத்த கொஞ்சநாள்ள தீரப்போகுது.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இங்கே பின்னிரவு.. அணிந்திருக்கும் இரவாடையில் ஆறு வண்ணங்கள் இருக்கின்றன. அதில் அதிகமானது சிகப்பு.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
இப்போதைக்கு பாடல் கேக்கல.. சுமார் 2 மணி நேரம் முன்பு நள்ளிரவில் கேட்ட கடைசி பாடலற்ற இசை 'White Mountain' - By Isha Yoga.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு.. அதிலும் வழுக்கிக்கொண்டு எழுதும் கருப்பு பேனா. :)

14.பிடித்த மணம்?
நிறைய இருக்கு..
தாளிக்கும் வாசனை, மண்வாசனை, பெட்ரோல் வாசனை, நீலகிரி தைல வாசனை, கோவிலின் பூவும் கற்பூரமும் சேர்ந்து மணக்குமே அது, பூக்களில் மல்லிகை, லாவண்டர், ..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

நளன் (குட்டி செல்வன்) : இணைய தோழன், கவிஞன், சகபதிவர், உடன்பிறவாத்தம்பி, நான் சென்னையில் வந்திறங்கியது தெரிந்தும் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவட்டு ஓடிவந்தவன்.
பிடித்த விசயம் அவன் எழுத்து மற்றும் உணர்வு வெளிப்பாடு.. சிறு குழந்தைபோல் அழுவதும் அடுத்த கணமே நட்சத்திரங்களில் தாவித்தாவி விளையாடும் குழந்தைமையும் பிடிக்கும். அவனோடு பேசும் போதெல்லாம் நானும் குழந்தையாகவே மாறியிருக்கிறேன்.

மீறான் அன்வர் : இந்தியா செல்லும்போதெல்லாம் சந்திக்க வேண்டுமென நினைத்து முடியாமல் போன எங்கள் ஊர் நண்பர். ஒருவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் ஆனந்தமாகவே இருக்கமுடியும் என்றால் அது நண்பர் மீறான் அன்வர் தான்.. எப்பொழுதும் பேச்சில் ஒரு துள்ளல் இருக்கும். அவர் இயற்கையை பார்க்கும் / கண்ணோட்டம் மிக அலாதியானது. ஒரு சிறு பூவினையும் நின்று ரசிக்க அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். குற்றாலமலைச் சாரலின் சொந்தக்காரர். அன்பு நண்பர், சக பதிவர். கவிஞர். :)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ஒன்றல்ல.. நிறைய இருக்கிறது. அவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் சமீபமாக வரும் கவிதைகளின் நடையும் மொழியும் கருத்தாழமும் என்னை மிகக் கவர்ந்தவை.அவரது உரையாடல்: சமூக இலக்கிய அமைப்பு போட்டிச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது..

17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டில் ஆர்வமில்லை. சிறுவயதில் பள்ளியில் / தெருவில் விளையாடியதோடு சரி.
கணிதம் மற்றும் புதிர்களை தீர்ப்பது பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
14 வருடங்களுக்கு முன்பாக ஒரு வருடம் அணிந்திருந்தேன். அதன்பின் இல்லை.
(இப்போ ஒரு கூலர்ஸ் அணிகிறேன்.. நீங்க அதைக் கேக்கலை இல்லையா.. ! :) )

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நெஞ்சை நெகிழ வைக்கும், மனதோடு பேசும், உணர்வுகளைத் தயங்காது பேசும் அனைத்து உலகத் திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
கடந்த 3 தினங்களில் பார்த்தவை.. 10000 BC, Benjamin Button, Hotel for dogs and The water (Hindi)

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்.
ஊரில் இருந்தவரை குற்றால சீசன் காலம் .. சீசனில் எங்கள் ஊரில் தூறிகொண்டே இருக்கும்..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஷோபாசக்தியின் கொரில்லா மற்றும் 'Poems To Live By In Uncertain Times' Edited by Joan Murray.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வழக்கமாக மாற்றுவதில்லை.
அலுவலக லாப்டாப் என்பதால் விதிமுறைகளின்படி பீனிக்ஸ் பல்கலைக்கழக குறியீட்டுப்படம் தான் இருக்க வேண்டும், அதை மாற்றக்கூடாது எனினும் நான் வெகுநாட்களாக தனித்த வெள்ளைப் பூ ஒன்றின் படம் தான் வைத்திருக்கிறேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : உடுக்கை மற்றும் உருமி சத்தம், தபேலா (பாடல் கேட்கையில் தபேலாவின் சப்தத்தை மட்டும் மனம் பிடித்துக்கொண்டு நகரும்..) அமைதியான பொழுதில் கேட்கும் பல பறவைகளின் கலந்த சத்தம், தண்ணீர் சலசலத்தோடும் சத்தம், பாடல் வரிகளற்ற இசையின் சப்தம் (White Mountain, ...)

பிடிக்காதது : சாப்பிடும்போது யாராவது வாயில் சவ சவ என சப்தம் எழுப்பினால் அதன்பின் ஒருநாளும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அதேபோல் பானத்தை உறுப் உறுப்பெனெ உறிஞ்சும் சத்தமும் அறவே பிடிக்காது. No compromise in these things.. அதென்னவோ அப்படியே பழகிடுச்சு..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சென்ற வாரம் வரைக்கும் சொன்னால் பீனிக்ஸ், அரிசோனா மாகாணம்,
வார இறுதியையும் சேர்த்தால் சாண்டியாகோ, கலிஃபோர்னியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இப்போதைக்கு நான் நானாக இருக்கிறேன். தனித்திறமை என்றால் அதை வாழ்வின் கடைசியில் தான் சொல்ல இயலுமென நம்புகிறேன்..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நடக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்..
There is nothing as good or bad in this world. All just exist.. - ஓஷோ

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.. சிறுவயதில் வீட்டில் கோபம் வந்து சண்டைபோட்டால் காளியம்மன் கோயில் சாமியாடியே தேவலை என அம்மா சொல்வார்கள்.. அவ்வளவு கோபமாக இருக்குமாம் என் முகம்..
கோபத்தை பெரும்பாலும் கொன்றுவிட்டேன். அதற்காக பலவருடங்களாக எனது உணவுப் பழக்கத்தையே முற்றும் மாற்றிவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் பல இடங்களில் படித்துவிட்டேன்.. கோபத்தைத் தவிர வேறு எதையும் (பெரும்பாலும்) யாரும் எழுதவில்லை ஏன்!? . :))

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குளிர்ந்த மலைப்பிரதேசம் எதுவானாலும், குறிப்பாக மூணாறு..
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் போக விரும்பும் இடம் கைலாஷ் - மானசரோவர்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பேரானந்தமாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
ம்ம்.. தெரியலியே...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
புதிர். அதை அவிழ்க்க வந்துதான் எதையெதையோ அவிழ்த்துக்கொண்டிருக்கிறோம்.

நன்றி.

சுயநினைவைத் தின்ற இரவு

4:25 PM Posted In Edit This 2 Comments »


தயங்கித் தயங்கி படரும் காலை
உட்புகும் மஞ்சளொளிக் கிரணங்களின் ஆசுவாசத்தில்
மிதமாய்த் தளர்கிறது அறையின் இறுக்கம்
மரக்கிளைகள் அசைத்து
சாளரம் வழிப்புகும் காற்று அள்ளிச்செல்கிறது
அடைத்துக் கிடந்த மருந்து நெடியை
ஒவ்வொரு முறையும்
தேவதையின் வெண்சிறகுகள் வாங்கி வருகிறாள்
அன்பாய் கவனித்துப்போகும் செவிலிச் சகோதரி
சுயநினைவைத் தின்று சோர்ந்த இரவு
தூக்கம் கொளுத்திக் காய்ந்த வலிகள்
அர்த்தம் பிடிபடாத புலம்பல் வாக்கியங்கள்
புட்டம் பெருத்த மூதாட்டியாய்
அருகமர்ந்து அச்சமூட்டும் மருத்துவப் பெரு எந்திரங்கள்
தனதான நியாயங்களுடன்
துயில் கலைந்து எழுந்திராத அப்பாவின் போதை
கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகின்றன
இருள்நீளப் போராட்டத்தின் பின்
மீட்டுத் திரும்பிய நினைவில்
உறங்காத விழிகளைக் குறித்த கேள்விகளுடன்
என்னிடம் ஏதும் பேசாமலேயே
கண்ணயர்கிறாள் அம்மா

வார்த்தை மே மாத இதழில் வெளியான கவிதை.

தூசு படிந்த மௌனம்

11:41 AM Posted In Edit This 6 Comments »


வளைந்துகிடக்கின்ற தெரு
வெளியேறிப்போகும்
சாக்கடைப் பாலத்தினோரம்
தனித்து நிற்கிறது துருப்பிடித்த மகிழ்வுந்து
முன்னொரு நாளில் துரத்திவந்த விபத்து
பின்னால் தாக்கியிருக்க வேண்டும்

திட்டுத்திட்டாய்த் தெரியும் வண்ணங்களில்
ஒட்டியிருக்கும் இளமையை
அழித்துக்கொண்டிருக்கின்றன
பயணங்களின் தூசுகள்
பின்சீட்டின் காலி மதுப்புட்டிகள்
கடந்துசென்ற போதைகளின்
சௌகரியங்களாக இருக்கக்கூடும்
உடைக்கப்பட்ட கண்ணாடியினுள்
கால்நீட்டி உறங்கலாம் பயணங்கள்
சீட்டுக் கீறல்களில் கசியும் கனவுகளுடன்

அன்றியும் பாலத்தில் முகம்திருப்பாது
கடந்துபோகும் புதுவாகனத்துடன்
பகிர்ந்துகொள்ள இயலாத
தனது இளமையின் நினைவுகளை
இந்நாளைய புறக்கணிப்பின் வலிகளை
மௌனமாய் பேசிக்கொண்டிருக்கக் கூடும்
அருகில் மேயும் நகரத்துச் பசுவிடமோ
பூத்துக் கிடக்கும் எருக்கஞ் செடியிடமோ

நினைவுகளின் மீள்வாசிப்பு

12:19 PM Edit This 7 Comments »


கொட்டும்பனியிலும்
பறவைகளுக்கு உணவிட மறந்திராத
கருப்பு அங்கி மூதாட்டி
தாயின் மார்பில் சாய்ந்தபடி
தயங்கித் தயங்கி விழியுயர்த்தி
வெட்கிப் புன்னகைத்த சிறு குழந்தை
பூட்டிக்கொண்டிருந்த மின்னுயர்த்தி தடுத்து
புன்முருவலித்து எனையேற்றிக்கொண்ட
விரிந்த உதட்டு ஆப்பிரிக்க அழகி
அழுக்குச் சட்டையுடன் சிக்னலில்
உதவி கேட்டுக்கொண்டிருந்த
ஒற்றைக் கண் பிச்சைக்காரன்
இந்நள்ளிரவில் பலரையும் அழைத்துவந்து
கவிதையின் வார்த்தைகள் விலக்கி
அமரவைத்திருக்கிறேன்
பிழைகளால் பிடிமானமின்றி
மேசையில் உதிர்ந்துகிடக்கும் வார்த்தைகள்
என்னுடன் சேர்ந்து மீள்வாசிக்கின்றன
எழுதி முடித்த கவிதையை

ஒரு நேசத்தின் மிச்சம்

12:10 PM Posted In Edit This 4 Comments »


மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்
உன் வன்மங்களை அறியத் துணியவில்லை
நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்
தேவதையென்றே புலம்புகின்றன
நிகழ்வுகள் அறியா உதடுகள்
கடவுச்சொற்கள் முதல்
அறையின் அலங்காரங்கள் வரையென
நிறைத்து வைத்திருக்குமென் காதலில்
இன்னும் கொஞ்சம் உயிர்
இருக்கத்தான் செய்கிறது..
இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்
உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே
காலாவதியாகியிருக்கலாம்
என் காதலும்..

வெறுமைகளின் பயணம்

3:18 PM Edit This 7 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென நீயும்
நீ எங்கிருந்து வந்தாயென நானும்
யாரை யார் தொடர்ந்தோமென இருவரும்
அறிந்திராதவொரு மழைச்சாரல் பொழுதில்
காடூடுறுவும் சிறுபாதையொன்றை
அழகாய்ப் பகிர்ந்திருந்தது
கைகள் கோர்த்த நம் நடை!

உன் சாயல்கொண்ட
இன்னும் பிறந்திரா என் குழந்தை
சாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது
தூரத்தில் இரைச்சலிட்ட காட்டாறும்
மென் கருமை பூசியிருந்த மாலைகளும்
நம் களிப்பிற்குச் சாட்சியாயிருந்தன
இவ்வுலகின் பாதையைக் காணாத வரையிலும்
நம் பயணங்கள் பிரிந்திருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை

பாரமான இலையுதிர்காலத்தின் நேரம்
நினைவுகளைச் சுருட்டி பிரிந்தோம்
சிநேகம் தொலைந்த வாழ்க்கை வழிகளில்
வெறுமைநோக்கி
வேகமாய் நடந்தபடியிருக்கின்றன கால்கள்!

பன்னீர்ப்பூக்களும் தேக்கிவைத்த வலிகளும்

7:05 AM Posted In Edit This 12 Comments »



தனிமையின் சலிப்பில்
வாசல் வந்தமரும் நடுநிசியில்
சிதறிக்கிடக்கும் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள்
சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன

பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு அவசியமாகின்றது

வெளிகளை நிரப்பிக்கிடக்கும் நறுமணம்
வலிகளை கொஞ்சம் மறக்கச் செய்கின்றது
குளிர்காற்றை நிறைத்துவரும் இரவின் பாடல்
ஆறுதலைக் கொண்டுவருகின்றது

உதிர்ந்து கிடப்பினும்
தீர்க்கம் நிறைந்த இந்த வாசப்பூக்கள்,
காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்
இரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்
இப்பொழுதே அறிந்திருக்கக் கூடும்

தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்