Welcome!


யாருமற்றதொரு பொழுதில்

2:41 PM Edit This 19 Comments »


அழகான என் கவிதையை
வாசிக்க ஆளில்லையென
கவலையாய் நான் திரும்புகையில்
படபடத்தபடியே படித்துப்போகிறது
ஜன்னல் வழி வந்த தென்றல்!

- - o 0 o - -

வீடுமுழுவதும் நிறைந்துகிடக்கும்
மௌனத்தின் திடத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது
குளியலறையில் சொட்டுகின்ற
திரவக்கவிதை!

- - o 0 o - -

முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!

- - o 0 o - -

சென்றவருடத்தில் பொரிந்த
குருவிக்குஞ்சுகளின் குரல்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
தாழ்வாரத்தின் வைக்கோல் மட்டுமுள்ள
வெற்று குருவிக்கூட்டில்..

- - o 0 o - -

பின்முற்றத்தில்
காக்கைக்கு வைக்கப்பட்ட சாதத்தில்
அமைதியாய் மொய்த்துக்கிடக்கின்றன
உன் நினைவுகளையொத்த எறும்புகள்!

- - o 0 o - -