Welcome!


பன்னீர்ப்பூக்களும் தேக்கிவைத்த வலிகளும்

7:05 AM Posted In Edit This 12 Comments »



தனிமையின் சலிப்பில்
வாசல் வந்தமரும் நடுநிசியில்
சிதறிக்கிடக்கும் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள்
சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன

பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு அவசியமாகின்றது

வெளிகளை நிரப்பிக்கிடக்கும் நறுமணம்
வலிகளை கொஞ்சம் மறக்கச் செய்கின்றது
குளிர்காற்றை நிறைத்துவரும் இரவின் பாடல்
ஆறுதலைக் கொண்டுவருகின்றது

உதிர்ந்து கிடப்பினும்
தீர்க்கம் நிறைந்த இந்த வாசப்பூக்கள்,
காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்
இரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்
இப்பொழுதே அறிந்திருக்கக் கூடும்

தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்