Welcome!


வலிகளில் தெரியும் முகம்

7:33 AM Posted In Edit This 7 Comments »


சோளப்பூக்களின்
மகரந்தமேந்திய தென்றலில்
கனிந்த வேப்பம்பழங்கள் வீழந்து
கிணற்றின் உறக்கம் கலைகையில்
சிதறும் 'தளுக்' களை
கெளுத்திமீன்கள் கவ்விச் செல்லும்

கிணற்றுச்சுவரின் சாத்தியப்பட்ட
கிளைகள் அனைத்திலும்
தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை
காய்ந்து தொங்கும்

அரவம் கேட்ட கணத்தில்
கவனம் காவிப்பறக்கும் சிட்டுகளின்
சிறகசைக்கும் ஆரவாரங்கள்
ஆழ்கிணற்றை நிறைத்துத் தளும்பும்

வெளிர்ஊதா மற்றும் மென்னீலமென
வண்ணக் கற்றைகள் விரவிய
முட்டையோட்டுக்குள் உறங்கும் தேன்சிட்டுகள்
காலங்களுக்காய்க் காத்திருக்கும்

சாம்பல் அணில்கள் ருசித்துப்போடும்
கருநீல நாவற்பழங்கள்
தன் கருமையின் மிச்சத்தை
நீர்ப்பரப்பெங்கும் குழைத்துப் பூசும்

இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்!

7 comments:

Anonymous said...

"இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்! "

எல்லோருடைய பால்ய காலத்தையும் நினைவுபடுத்திய கவிதைக்கு வாழ்த்துக்கள்.

சாந்தி

நளன் said...

"இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்! "

:(((

கோகுலன் said...

//எல்லோருடைய பால்ய காலத்தையும் நினைவுபடுத்திய கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

அன்புள்ள சாந்தி,

அன்புடன் வரவேற்கிறேன்.

தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க!!

கோகுலன் said...

வா செல்வா.. அன்புடன் வரவேற்கிறேன்..

என்ன பண்றது.. வலிகளில் தெரிந்த முகம் அப்படி சோகமாகத்தான் இருக்கிறது.. :))

MSK / Saravana said...

//சோளப்பூக்களின்
மகரந்தமேந்திய தென்றலில்
கனிந்த வேப்பம்பழங்கள் வீழந்து
கிணற்றின் உறக்கம் கலைகையில்
சிதறும் 'தளுக்' களை
கெளுத்திமீன்கள் கவ்விச் செல்லும்

கிணற்றுச்சுவரின் சாத்தியப்பட்ட
கிளைகள் அனைத்திலும்
தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை
காய்ந்து தொங்கும்

அரவம் கேட்ட கணத்தில்
கவனம் காவிப்பறக்கும் சிட்டுகளின்
சிறகசைக்கும் ஆரவாரங்கள்
ஆழ்கிணற்றை நிறைத்துத் தளும்பும்

வெளிர்ஊதா மற்றும் மென்னீலமென
வண்ணக் கற்றைகள் விரவிய
முட்டையோட்டுக்குள் உறங்கும் தேன்சிட்டுகள்
காலங்களுக்காய்க் காத்திருக்கும்

சாம்பல் அணில்கள் ருசித்துப்போடும்
கருநீல நாவற்பழங்கள்
தன் கருமையின் மிச்சத்தை
நீர்ப்பரப்பெங்கும் குழைத்துப் பூசும்//


ரொம்ப ஓவர் கோகுலன் அண்ணா.. இப்படியெல்லாம் நீங்க எழுதினா நாங்க எல்லாம் கடைய சாத்த வேண்டியதுதான்.. :(((

அநியாயத்துக்கு ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு..

anujanya said...

அதானே, இப்படி எழுதினா, நாங்க எல்லாம் என்ன எழுத? நல்லா இருக்கு கோகுலன்.

சற்று வல்லின, மெல்லின பார்த்துக்கொள்ளுங்கள்.
//மென்னீலமென// - மென்நீலமென;
போலவே உங்கள் அடுத்த கவிதையில் - //பரிட்சயமில்லை// - பரிச்சயமில்லை.

உங்கள் மொழி ஆளுமை சிறப்பு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

நுண்சித்தரிப்புகள்.என் கொஞ்ச கால,கிராம அனுபவத்தை ,frame by frame நினைவுபடுத்தீருக்கிறது.அனுபவித்து எழுதியிருப்பது தெரிகிறது.