Welcome!


ஆனந்தம்

7:00 PM Posted In Edit This 1 Comment »
ஆனந்தம்

பறவைகள் விரிக்கும் இறகுகள் ஆனந்தம்
பகல்கள் துயிலும் இரவுகள் ஆனந்தம்
பகட்டுகள் கலவாத இயல்புகள் ஆனந்தம்
பண்பட்ட தமிழின் இனிமையும் ஆனந்தம்

நிலாதினம் உலாவரும் வான்வெளி ஆனந்தம்
நீரோடி விளையாடும் வயல்வெளி ஆனந்தம்
நித்தமும் மழலையின் வாய்மொழி ஆனந்தம்
நினைவுகள் அசைபோட வாழ்க்கையே ஆனந்தம்

சப்தங்கள் உறையும் தனிமைகள் ஆனந்தம்
சந்தங்கள் நிறையும் இன்னிசை ஆனந்தம்
சந்நிதியில் இறைவனின் தன்னருள் ஆனந்தம்
சக்தியை ஊட்டுகின்ற தியானமும் ஆனந்தம்

புலர்கின்ற நேரத்தில் புல்வெளி ஆனந்தம்
புல்வெளி பூத்திருக்கும் பனித்துளிகள் ஆனந்தம்
பனித்துளியை கவரவரும் கதிர்களும் ஆனந்தம்
புன்னகையில் சிவந்திருக்கும் கீழ்வானம் ஆனந்தம்

அலைகளை ரசிக்கின்ற கரைகள் ஆனந்தம்
அலைகள் கொட்டும் நுரைகள் ஆனந்தம்
அதிரும் கரவொலியில் பாராட்டு ஆனந்தம்
அன்புடன் தாய்பாடும் தாலாட்டு ஆனந்தம்

மாலையில் சோலையில் பட்சிகள் ஆனந்தம்
மனங்கவர் வண்ணத்து பூச்சிகள் ஆனந்தம்
மாலையில் சாரலுடன் குளிர்காற்று ஆனந்தம்
மழைத்தூறல் விழுமண்ணின் வாசனையும் ஆனந்தம்

கொட்டும் மழையினிலே நடைபோக ஆனந்தம்
கோடை வெயிலினிலே நீந்துவதும் ஆனந்தம்
கொஞ்சமும் பொய்யிலாத புன்னகைகள் ஆனந்தம்
கொட்டுகொட்டி ஆட்டமாடும் போகிகள் ஆனந்தம்

பேருந்து பயணத்தில் ஜன்னலோரம் ஆனந்தம்
பேச்சுத் துணையிருக்க நடுக்கடலும் ஆனந்தம்
பேர்சொல்லும் பிள்ளைபெற்ற தகப்பனுக்கு ஆனந்தம்
பேராசை இல்லாத மனமிருந்தால் ஆனந்தம்

சிறுவயது தோழர்கள் கண்டாலே ஆனந்தம்
சீராகச்சேல்லு மாற்றின் நீரோட்டம் ஆனந்தம்
சிந்தனையின் வந்துபோகும் கற்பனைகள் ஆனந்தம்
சிற்பிகையில் வரம்வாங்கும் கற்சிலைகள் ஆனந்தம்

திருவிழா நாட்களில் தாவணிகள் ஆனந்தம்
திருமணங்கள் நிறைத்துவரும் ஆவணிகள் ஆனந்தம்
திருப்பங்கள் அதிகமுள்ள மலைப்பாதை ஆனந்தம்
திரும்பதிரும்ப சொல்லிப்பார்க்க அவள்பெயரே ஆனந்தம்

1 comments:

வைகறை நிலா said...

இப்படி இனிய கவிதை வாசிப்பதும் ஆனந்தம்.