காதலர் தினக் கவிதை
7:30 PM Posted In காதல் Edit This 5 Comments »
அன்பே!
நீ வேண்டும் எனக்கு
இல்லாமல் போனால்
இறக்க வேண்டிய சுவாசமாய்
வாழ்வின் முழுமைக்கும்
நீ வேண்டும் எனக்கு
உலகின் பாதைக்கெல்லாம்
ஒளிதரும் சூரியனாய்
எனக்கேயான பாதைகளுக்கு
நீ வேண்டும் எனக்கு
தனிமையின் தாகத்தில்
வானம் பார்க்க
கொட்டிப்போகின்ற சிறுமழையாய்
நீ வேண்டும் எனக்கு
சோர்வில் அண்ணாந்து
பார்க்கின்ற பொழுதெல்லாம்
சொர்க்கத்தின்
சாயல் காட்டிநிற்கும்
பரந்துபோன வானமாய்
நீ வேண்டும் எனக்கு
பனி இரவில்
தீயின் வெப்பம் ஏந்தி
இரவை இதமாக்க நீ
வேண்டும் எனக்கு
உயிர்ப்புல்வெளியில்
சிதறிக்கிடக்கும்
பனித்துளிகளை
கொட்டிப்போகும் பின்னிரவாய்
நீ வேண்டும் எனக்கு
அதிகாலை காதுக்குள்
இசையில் கூச்சமூட்டும்
ஜன்னலோர குருவிகளாய்
நீ வேண்டும் எனக்கு
தோல்வி நேரத்திலும்
வெற்றியின் களிப்பு தரும்
தோட்டத்துப்பூக்களாய்
நீ வேண்டும் எனக்கு
மொட்டைமாடி பாய்விரித்து
நட்சத்திரம் எண்ணிக்கிடக்கும்
நிலவுக்குளியலில்
நீ வேண்டும் எனக்கு
உன் இன்னொரு பிள்ளை நானுமாய்
என் இன்னொரு தாய் நீயுமாய்
சாவிற்கு சற்று தள்ளியும் கூட
நீ வேண்டும் எனக்கு
நீ வேண்டும் எனக்கு!









