ஞானமாய் இருக்கக்கூடும்!
10:46 PM Posted In சித்து Edit This 1 Comment »![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimABDxPZKx43IlS0aAJ9bWd8MkhUmm8DeCwSffqrbTwDJeayocpVtwo94lONTJe5CQ58VU18tiuQV-2X3voTlLzx5T9sCB6KCMKffb0mjc2CSS3RjOF1erI3gpHj9stBXTkeMoSdWJcg/s400/778.jpg)
அதிகாலைக் கனவொன்றின்வழியே
பறந்துவந்ததொரு வெள்ளைப்பட்சி
கூரையற்ற வீட்டின் விட்டத்தில்
ஆசுவாசமாய் வந்தமர்ந்தது
எனக்கான தன் கேள்வியுடன்
இதுவரை நான் யோசித்திராத
பிறப்பின் காரணம் கேட்ட
அதன் கேள்விக்கு
சற்றே குழம்பித் தெளிந்தவனாய்
பிறர்க்கு உதவிடலென பதில் சொன்னேன்..
ஓரறிவு மரம் செய்யுமதனையென
அது புன்னகைத்தபடியே சொன்னபோது
ஒப்புதலில் தலைகவிழ்ந்தேன்
அன்பு செயதலென சொல்ல விழைந்து
அதற்கு ஐந்தறிவே போதுமென அமைதியானேன்
பின், இன்றியமையாத் தேடலொன்றின் பாதையை
கனவின் அப்புறத்தில் கண்டபொழுது
தீர்க்கமான நிழலொன்று கூரைமேவிநின்றது
தாவிப்பறக்கும் பட்சியிடம் பெயர் கேட்டேன்
தேடிக்காண வேண்டுமெனச் சொல்லிப் பறக்கிறது.
ஞானமாய் இருக்கக்கூடும்!