நண்பன்!
2:47 PM Posted In நட்பு Edit This 3 Comments »
எனக்கொரு நண்பன்
ஆண்டவனின்
நட்பெனும் மாலையில்
அருகருகே கட்டப்பட்ட
இரு மல்லிகளாய்
நாங்கள்!
மூக்கு ஒழுகிக்கொண்டு
சுற்றிய நாட்களிலேயே
அரும்பான நட்பு
நாங்கள் வளர
அதுவும் வளர்ந்தது
அவனுடைய
ரமலான் நோன்புக்கும்
அம்மாவிடம்
சாப்பிட்டதாய் பொய்சொல்லி
நான் எச்சில் விழுங்காமல்
இருந்ததையும்,
எனக்கு பிடித்த கொழுக்கட்டை
அவன் அம்மா செய்து வைக்க
எனக்காய் எடுத்துக்கொண்டு
ஓடி வருததையும்
இன்றும் நினைத்து
என்னால் கர்வப்படாமல்
இருக்க முடிவதில்லை.
கிடைத்த ஒரே பொன்வண்டையும்
எனக்காக கொண்டுவந்தவன்
எங்கள்வீட்டு சரஸ்வதி பூஜையில்
புத்தகம் கொண்டுவந்து
அழகாய் பொட்டிட்டு வைப்பவன்
உயிர் காத்த தோழன்தான்..
காட்டாற்று ஓடையில்
நீச்சல் தெரியாத நான்
ஆர்வத்துடன்
கால்வைத்த போதிலும்..
இன்று காலவெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
இருவேறு திசைகளில்
அவனும் நானும்..
நீச்சல் தெரிந்தும்
போய்க்கொண்டிருக்கிறோம்
அலைகளின் போக்கில்..
காலத்தின் தந்திரத்தில்..
அறிவியல் வளர்ச்சியில்
உலகில் யாவரையும்
அதிகப்படியாய்
அடுத்த நாளில் காணலாம்
என்றாலும்...
அடுத்த நாளின் தீர்மானங்கள்
கடமைகளின் காலடியில்தான்
கட்டப்பட்டு கிடக்கின்றன
காத்திருப்போம்..
நாட்கள் அதிகமில்லை..
அதிகப்படியாய் தள்ளாடும் வயது
மீண்டும் கைகோர்த்தபடி ரசித்திருப்போம்
அதிகாலை நிலவையும்
அந்தி வானத்தையும்..
அதே பழைய படகில் இருந்தபடியே!