Welcome!


ஒரு நேசத்தின் மிச்சம்

12:10 PM Posted In Edit This 4 Comments »


மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்
உன் வன்மங்களை அறியத் துணியவில்லை
நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்
தேவதையென்றே புலம்புகின்றன
நிகழ்வுகள் அறியா உதடுகள்
கடவுச்சொற்கள் முதல்
அறையின் அலங்காரங்கள் வரையென
நிறைத்து வைத்திருக்குமென் காதலில்
இன்னும் கொஞ்சம் உயிர்
இருக்கத்தான் செய்கிறது..
இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்
உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே
காலாவதியாகியிருக்கலாம்
என் காதலும்..

பன்னீர்ப்பூக்களும் தேக்கிவைத்த வலிகளும்

7:05 AM Posted In Edit This 12 Comments »



தனிமையின் சலிப்பில்
வாசல் வந்தமரும் நடுநிசியில்
சிதறிக்கிடக்கும் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள்
சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன

பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை
மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு
என் வலிகள் பரிட்சயமில்லை எனினும்
இந் நீள் இரவைக் கடப்பதற்கு
இவற்றின் நட்பு அவசியமாகின்றது

வெளிகளை நிரப்பிக்கிடக்கும் நறுமணம்
வலிகளை கொஞ்சம் மறக்கச் செய்கின்றது
குளிர்காற்றை நிறைத்துவரும் இரவின் பாடல்
ஆறுதலைக் கொண்டுவருகின்றது

உதிர்ந்து கிடப்பினும்
தீர்க்கம் நிறைந்த இந்த வாசப்பூக்கள்,
காலைநேர சப்பாத்துக்கால்களின் அலட்சியங்களையும்
இரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்
இப்பொழுதே அறிந்திருக்கக் கூடும்

தேக்கிவைத்த என் வலிகளை
சூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி
வாழ்க்கைச் சூட்சமங்களை
ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்

நீ வரப்போவதில்லையென

7:27 AM Posted In Edit This 9 Comments »


இலையுதிர்க்கால முற்றத்தில்
குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக
வசந்தத்தின் பழைய பாடல்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி
தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம்

உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதொன்றில்
நினைவுகள் இறைந்து கிடக்கும் குளக்கரையின்
அதிரத் தளும்பும் அலைகளினூடாக
உடைந்த நிலவை கரங்குழித்து அள்ளுகிறேன்
விரலிடுக்கில் ஒழுகுகிறது வெறுமை

அதிகாலைக் கனவொன்றில்
அறைச்சுவரின் சட்டங்களுக்குள் பொறிக்கப்பட்ட
உன் புன்னகையேந்திய முகம் தூர்ந்துதிர
ஆழ் உறக்கத்தின் நடுவிலும்
உனை அணைத்துக்கொள்வதற்கென
சட்டென நீண்ட கரங்களுக்குத் தெரியவில்லை
இனி என்றும் நீ வரப்போவதில்லையென!