Welcome!


வலிகளில் தெரியும் முகம்

7:33 AM Posted In Edit This 7 Comments »


சோளப்பூக்களின்
மகரந்தமேந்திய தென்றலில்
கனிந்த வேப்பம்பழங்கள் வீழந்து
கிணற்றின் உறக்கம் கலைகையில்
சிதறும் 'தளுக்' களை
கெளுத்திமீன்கள் கவ்விச் செல்லும்

கிணற்றுச்சுவரின் சாத்தியப்பட்ட
கிளைகள் அனைத்திலும்
தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை
காய்ந்து தொங்கும்

அரவம் கேட்ட கணத்தில்
கவனம் காவிப்பறக்கும் சிட்டுகளின்
சிறகசைக்கும் ஆரவாரங்கள்
ஆழ்கிணற்றை நிறைத்துத் தளும்பும்

வெளிர்ஊதா மற்றும் மென்னீலமென
வண்ணக் கற்றைகள் விரவிய
முட்டையோட்டுக்குள் உறங்கும் தேன்சிட்டுகள்
காலங்களுக்காய்க் காத்திருக்கும்

சாம்பல் அணில்கள் ருசித்துப்போடும்
கருநீல நாவற்பழங்கள்
தன் கருமையின் மிச்சத்தை
நீர்ப்பரப்பெங்கும் குழைத்துப் பூசும்

இன்று, காலத்தின் பின்னே
தூர்ந்து போன அதே கிணற்றில்
பால்யங்களைத் தேடிக் குனிகிறேன்
ஆழ்துயர் மௌனத்தினூடே
பாழ்பட்ட அடித்தரையின்
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்!

நானும் காதலும் - 1

6:03 AM Posted In Edit This 7 Comments »


மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!

அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!